காங்கிரசுடன் உறவை முறித்தது ஏன்? கார்கேவுக்கு தேவகவுடா பதிலடி
காங்கிரசுடன் உறவை முறித்தது ஏன்? கார்கேவுக்கு தேவகவுடா பதிலடி
UPDATED : மார் 19, 2026 06:24 AM
ADDED : மார் 19, 2026 06:20 AM

பெங்களூரு: ''கட்டாய திருமண உறவால் காங்கிரசிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது,'' என்று, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, தேவகவுடா பதிலடி கொடுத்து உள்ளார்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்யசபாவில் நேற்று பேசுகையில், 'எனக்கு தேவகவுடாவை 54 ஆண்டுகளாக தெரியும். அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். எங்களை நேசித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியை திருமணம் செய்து கொண்டார். இதற்கான காரணம் தெரியவில்லை' என்று நகைச்சுவையாக பேசினார்.
இதை கேட்டு பிரதமர் மோடி, எம்.பி.,க்கள் சிரித்தனர். அந்த நேரத்தில் தேவகவுடா அ ங்கு இல்லை.
இந்நிலையில், 'எக்ஸ்' வலைதளத்தில் தேவகவுடாவின் பதிவு:
எனது அன்பு நண்பரான மல்லிகார்ஜுன கார்கே ராஜ்யசபாவில் பேசும் போது, பிரதமர் மோடியை, தேவகவுடா திருமணம் செய்து கொண்டதாக கூறி உள்ளார். எனது நண்பரின் வார்த்தைகளுக்கு அவர் பேசிய திருமண மொழியில் பதில் அளிப்பதாக இருந்தால், காங்கிரசுடன் எங்களுக்கு கட்டாய திருமணம் நடந்தது. அது ஒரு வன்முறையான உறவாக இருந்ததால் விவாகரத்து செய்தோம்.
கடந்த 2018ல் குமாரசாமியை முதல்வர் ஆக்க, குலாம் நபி ஆசாத்தை, காங்கிரஸ் மேலிடம் கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தது, கார்கேவுக்கு நினைவு இருக்கலாம். குமாரசாமியை முதல்வராக்க நான் ஒப்பு கொள்ளவில்லை. கார்கேயை முதல்வராக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால், குமாரசாமி தான் முதல்வர் ஆக வேண்டும் என்று, குலாம் நபி ஆசாத் கூறினார் .
இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கு பின் நடந்த திருமணத்திற்கு பிறகு, 2019ல் என்ன நடந்தது. எங்களை விட்டு யார் முதலில் பிரிந்து சென்றனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஏன் பா.ஜ., சென்றனர். அவர்களை யார் அனுப்பினர் என்பது, எல்லாருக்கும் தெரிந்த விஷயம் . அன்று கட்சி தாவலை துாண்டியவர்கள் மீது, காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து இருந்தால், எனது நண்பர் கா ர்கே இன்று நல்ல நிலையில் இருந்து இருப்பார். நாங் கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகவில்லை. அவர்கள் தான் எங்களை பிரிந்தனர். நிலையான கூட்டணியை தேடுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
