/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கணவருக்கு கத்தி குத்து ஆவேச மனைவி கைது
/
கணவருக்கு கத்தி குத்து ஆவேச மனைவி கைது
ADDED : ஏப் 28, 2025 06:59 AM

விஜயபுரா: 'மொபைல் போனில் மூழ்கியிருக்க வேண்டாம்' என, புத்திமதி கூறிய கணவரை, கத்தியால் குத்திய மனைவி கைது செய்யப்பட்டார்.
விஜயபுரா நகரின் ஆலகுன்டே நகரில் வசிப்பவர் அஜித் ராத்தோட், 30. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி தேஜு ராத்தோட், 27.
இவர், மொபைல் போனுக்கு அடிமையானவர். வீட்டை கவனிக்காமல், எந்த நேரமும் மற்றவர்களுடன் 'சாட்டிங்' செய்து பொழுது போக்குவார். கணவர் பல முறை புத்திமதி கூறியும் பலன் இல்லை.
தினமும் சாட்டிங்கில் இருந்ததால், மனைவிக்கு வேறு யாருடனோ கள்ளத்தொடர்பு இருக்கலாம் என, அஜித் சந்தேகம் அடைந்தார்.
இது குறித்து கேட்டால், தேஜு பதில் அளிக்காமல், சண்டை போட்டு உள்ளார். இதனால் கணவரின் சந்தேகம் அதிகமானது.
நேற்று முன் தினம் நள்ளிரவும், தேஜு மொபைல் போனில் சாட்டிங் செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து கோபம் அடைந்த அஜித், 'யாருடன் சாட்டிங் செய்கிறாய். பதில் சொல்' என விசாரித்தார்.
ஆனால், மனைவி பதில் அளிக்கவில்லை. இதனால் நீண்ட நேரம் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அதன்பின் அஜித் உறக்கத்தில் ஆழ்ந்தார். அவரது மனைவியின் கோபம் குறையவில்லை.
அதிகாலை 3:00 மணியளவில், தேஜு காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து, கணவர் அஜித்தின் கழுத்திலும், வயிற்றிலும் சரமாரி குத்தினார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் உள்ளே வந்து பார்த்தனர். அவர் ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்தார்.
உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து, ஆதர்ஷா நகர் போலீஸ் நிலையத்தில், புகார் செய்யப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த போலீசார், அஜித்திடம் நடந்த சம்பவம் குறித்து தகவல் பெற்று கொண்டனர்.
அவரை கொலை செய்ய முயன்ற மனைவி தேஜுவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
தான் சாட்டிங் செய்தது குறித்து, கணவர் தட்டி கேட்டதால், பழிவாங்கும் நோக்கில் அவரை தேஜு கொலை செய்ய முயற்சித்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.