/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கணவர் குடும்பத்தினர் கொடுமையால் மனைவி தற்கொலை
/
கணவர் குடும்பத்தினர் கொடுமையால் மனைவி தற்கொலை
ADDED : நவ 01, 2025 04:24 AM
ஷிவமொக்கா: கணவர் வீட்டினரின் சித்ரவதையால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை மருத்துவமனையில் 'அம்போ'வென போட்டு விட்டு, கணவர் குடும்பத்தினர் ஓட்டம் பிடித்தனர்.
ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளி தாலுகாவின், கோனந்துார் கிராமத்தில் வசிப்பவர் சரத், 28. இவரது மனைவி பூஜா, 24. தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
சரத்தின் தாய், தந்தை மற்றும் சகோதரி கூட்டு சேர்ந்து பூஜாவை பல விதங்களில் கொடுமைப்படுத்தினர். மனம் நொந்த அவர், தாய் வீட்டுக்குச் சென்று, பெற்றோரிடம் நடந்ததை கூறினார். மகளை சமாதானம் செய்து, அனைத்தும் சரியாகும் என, கூறி கணவர் வீட்டுக்கே அவரது பெற்றோர் அனுப்பி வைத்தனர்.
ஆனால் சரத் குடும்பத்தினர் மாறவில்லை. தொடர்ந்து கஷ்டத்தை கொடுத்தனர். இதனால் விரக்தி அடைந்த பூஜா, நேற்று அதிகாலை பூச்சிகொல்லி மருந்து குடித்தார். அவரை ஷிவமொக்காவின் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா உயிரிழந்தார்.
பீதியடைந்த கணவர் வீட்டினர், பூஜாவின் உடலை மருத்துவமனையிலேயே அப்படியே போட்டு விட்டு, தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து, தகவலறிந்து பூஜாவின் பெற்றோர், மருத்துவமனைக்கு வந்தனர். மகளை தற்கொலைக்கு துாண்டிய சரத் குடும்பத்தினர் மீது, தீர்த்தஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்.

