உயிருள்ள கணவருக்கு அஞ்சலி 'ஸ்டேட்டஸ்' வைத்த மனைவி
உயிருள்ள கணவருக்கு அஞ்சலி 'ஸ்டேட்டஸ்' வைத்த மனைவி
ADDED : மே 16, 2026 03:29 AM
சிக்கபல்லாபூர்: குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட கோபத்தில், உயிருடன் உள்ள கணவருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரை தாக்கவும் செய்த மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, வழக்கு பதிவாகியுள்ளது.
சிக்கபல்லாபூர் மாவட்டம், சித்லகட்டா தாலுகாவின், தொட்டதேகனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் குமார், 30. இவரது மனைவி அனுஜா, 26. தம்பதிக்கிடையே சிறு சிறு விஷயங்களுக்கும், சண்டை நடந்தது.
தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என, அனுஜா பிடிவாதம் பிடித்தார். மனைவியின் விருப்பப்படியே, தனியாக வாடகை வீடு எடுத்தார். அப்போதும் மனைவி, நல்ல முறையில் நடந்து கொள்ளவில்லை. கணவருக்கு தொந்தரவு கொடுத்தார்.
சமீபத்தில் கணவருடன் கோபித்து கொண்டு, கவுரிபிதனுார் தாலுகாவின், சாகானஹள்ளி கிராமத்தில் உள்ள, தன் தாய் வீட்டுக்கு அனுஜா சென்று விட்டார். அங்கிருந்து மொபைல் போன் மூலம், கணவருடன் தகராறு செய்தார்.
கணவர் மீது ஏற்பட்ட கோபத்தில், குமாரின் போட்டோவை தன், வாட்ஸாப் ஸ்டேட்டசில் வைத்து, இரங்கல் அஞ்சலி என, எழுதினார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார் குமார். மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வர, நேற்று முன்தினம் மனைவியின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது மனைவியும், அவரது குடும்பத்தினரும் குமாரின் முகத்தில் மிளகாய் பொடியை வீசி, உருட்டு கட்டை, இரும்புத்தடியால் கண்மூடித்தனமாக தாக்கினர். அவர் சென்ற காரையும் அடித்து நொறுக்கினார்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த குமார், பெங்களூரின் 'நிமான்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவரை தாக்கிய மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, கவுரி பிதனுார் போலீஸ் நிலையத்தில், குமாரின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் விசாரணை நடத்துகின்றனர்.
