ADDED : ஏப் 10, 2026 04:15 AM
சிக்கமகளூரு: கணவர் இறந்தது தெரியாமல், அவரது உடலுடன், 10 நாட்கள் மனநலம் பாதித்த மனைவி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகா, கொட்டிகேஹாரா கிராமத்தில் வசித்தவர் சிரில் மோனிஸ், 77. இவருக்கு மனைவியும், மகன், மகளும் உள்ளனர். மகன் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மகள் துபாயில் ஆசிரியையாக உள்ளார்.
மகள் தொலைவில் உள்ள நாட்டில் இருந்ததால், மகன் அவ்வப்போது கிராமத்துக்கு வந்து, பெற்றோரை பார்த்து செல்வது வழக்கம். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், கிராமத்துக்கு வந்த மகன், நான்கு நாட்கள் பெற்றோருடன் இருந்து விட்டு, பெங்களூருக்கு திரும்பினார்.
அதேநேரத்தில், உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்ட சிரில் மோனிஸ் உயிரிழந்தார். அவரது மனைவி மனநிலை சரியில்லாதவர் என்பதால், கணவர் இறந்தது தெரியவில்லை. உறக்கத்தில் இருப்பதாக நினைத்து, கணவரின் உடல் அருகே இருந்தார்.
நான்கு நாட்களுக்கு முன், மகன் போன் செய்து விசாரித்த போதும், அப்பா நன்றாக இருப்பதாக கூறினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், இவர்களின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதை அக்கம், பக்கத்தினர் கவனித்தனர். சிரில் மோனிஸ் வெளியே தென்படவில்லை.
அதனால், சந்தேகமடைந்த அப்பகுதியினர் உள்ளே சென்று பார்த்த போது, சிரில் மோனிஸ் இறந்து கிடப்பதும், அவரது உடல் அழுகி புழுக்கள் வந்ததும் தெரியவந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த பனகல் போலீசார், அவரது உடலை கொண்டு செல்ல முயற்சித்த போது, மனைவி விடவில்லை. என் கணவர் எனக்கு வேண்டும் என்று கூச்சலிட்டார். அவரை கட்டுப்படுத்தி உடலை மீட்டனர். அவரது மகளுக்கும், மகனுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
