ADDED : மே 09, 2026 02:30 AM

ஷிவமொக்கா: தங்களின் முறை தவறிய காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்ற வழக்கில், மனைவி, கள்ளக்காதலனுக்கு துாக்கு தண்டனை விதித்து ஷிவமொக்கா நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
ஷிவமொக்கா மாவட்டம் பத்ராவதியை சேர்ந்தவர் பிரகாஷ் பாபு, 35; வாடகை கார் டிரைவர். இவர், 2014ம் ஆண்டு, தன் மாமா மகள் புளோரா நான்சி, 25, என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
பத்ராவதியில் உள்ள நர்சிங் ஹோமில் புளோரா வேலை செய்த போது, அங்கு பணியாற்றிய ராஜசேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவருக்கும் முறை தவறிய காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.
இதுபற்றி அறிந்த கணவர், மனைவியை கண்டித்தார். கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கணவரை தீர்த்து கட்ட மனைவி முடிவு செய்தார். 2020, ஜனவரி 15ம் தேதி கணவருக்கு பாலில் துாக்க மாத்திரையை கலந்து கொடுத்தார்.
பிரகாஷ் பாபு துாங்கியதும் அங்கு வந்த ராஜசேகர், பிரகாஷ் பாபுவின் கழுத்தை நெரித்து கொன்றார். பின், உடலை காரில் ஏற்றி சென்று, தரிகெரே தாலுகா லிங்கடஹள்ளியில் ஓடும் பத்ரா கால்வாயில் வீசினார்.
மூன்று நாட்களுக்கு பின் அவரது உடல் மீட்கப்பட்டது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவர் தற்கொலை செய்ததாக மனைவி நாடகம் ஆடினார். ஆனாலும் பிரகாஷ் பாபு சகோதரர் பிரான்சிஸ் அளித்த புகாரில், பத்ராவதி பேப்பர் டவுன் போலீசார் விசாரித்தனர்.
அப்போது, ராஜசேகருக்கும், புளோராவுக்கும் முறை தவறிய காதல் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் கொலை செய்ததை இருவரும் ஒப்பு கொண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் ஷிவமொக்கா நான்காவது மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை நீதிபதி இந்திரா மைலசாமி விசாரித்து, ராஜசேகர், புளோரா இருவரும் குற்றவாளிகள் என, கடந்த மாதம் அறிவித்து, தீர்ப்பை நேற்று ஒத்திவைத்திருந்தார்.
அவர் நேற்று வழங்கிய தீர்ப்பில், ராஜசேகர், புளோராவுக்கு துாக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
தவிர 14 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், அதில் 5 லட்சம் ரூபாயை, பிரகாஷ் பாபு சகோதரர் பிரான்சிசுக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
