ADDED : மே 18, 2026 11:21 PM
சிக்கமகளூரு: மலைப்பகுதி மாவட்டமான சிக்கமகளூரில் வன விலங்குகள் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தற்போது 30க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் நுழைந்ததால், கிராமத்தினர் பீதி அடைந்துள்ளனர்.
சிக்கமகளூரு மாவட்டத்தில் காட்டு யானைகள், சிறுத்தைகள் அச்சுறுத்தல் அதிகம் இருந்தது. காபி எஸ்டேட்டுகளில் இவை நடமாடுகின்றன.
இதனால் தொழிலாளர்கள் எஸ்டேட்களுக்கு, பணிக்கு செல்லவே அஞ்சுகின்றனர். வன விலங்குகளை பிடிக்க வனத்துறையும் போராடுகிறது. இதற்கிடையே காட்டெருமைகள் ஊருக்குள் புகுந்து, மக்களை அச்சுறுத்துகின்றன.
சிக்கமகளூரு மாவட்டம், கலசா தாலுகாவின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஹொரநாடு அருகில், எளகுந்த்ரி என்ற இடத்தில் 30க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் புகுந்துள்ளன.
மக்கள் நடமாடும் சாலையின் அக்கம், பக்கத்தில் வரிசையாக நடமாடுகின்றன. இந்த காட்சியை அப்பகுதியில் வசிக்கும் ஒருவர், தன் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது பரவியுள்ளது.
காட்டெருமைகள் விவசாயிகளின் தோட்டங்கள், வயல்களில் புகுந்து பயிர்களை மிதித்து சேதப்படுத்துகின்றன. வாகன பயணியர் பாதிப்படைந்துள்ளனர். அப்பகுதி மக்கள் வீட்டில் இருந்து வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
குழந்தைகளையும் வெளியே விடுவதில்லை. காட்டெருமைகளை வனத்துக்குள் விரட்டும்படி, வனத்துறையினரிடம் வலியுறுத்துகின்றனர்.
