தாவணகெரே தெற்கில் பயில்வான் கை கொடுப்பாரா, குத்து விடுவாரா?
தாவணகெரே தெற்கில் பயில்வான் கை கொடுப்பாரா, குத்து விடுவாரா?
ADDED : ஏப் 01, 2026 03:36 AM

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள், தங்கள் வெற்றிக்காக பாடுபடும் தொண்டர்களுக்கு, ஒரு போதும் நல்லதே நடக்கக்கூடாது என்று நினைப்பவர்கள். தங்களுக்கு அடுத்து வாரிசு தான் வர வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பவர்கள்.
இதேநிலை தான் தற்போது தாவணகெரேயில் உள்ளது. தாவணகெரே தெற்கு எம்.எல்.ஏ.,வாக இருந்த சாமனுார் சிவசங்கரப்பா மரணம் அடைந்ததால், வரும், 9 ம் தேதி அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது.
சிவசங்கரப்பாவின் குடும்பத்தில் அவரது மகன் மல்லிகார்ஜுன், கர்நாடக தோட்ட கலை அமைச்சராகவும், மருமகள் பிரபா தாவணகெரே காங்கிரஸ் எம்.பி.,யாகவும் உள்ளனர். இப்படி இருந்தும், அவர்களுக்கு அரசியல் ஆசை விடவில்லை.
பண பலம் தன் மகன் சமர்த்தை தேர்தல் களத்தில் இறக்கி விட்டுள்ளார் மல்லிகார்ஜுன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தாவணகெரே தெற்கில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது முஸ்லிம் ஓட்டுகள் தான். சாமனுார் மீது இருந்த மரியாதையால், அவர் உயிருடன் இருக்கும் வரை, அத்தொகுதியில் போட்டியிட முஸ்லிம்கள் யாருமே சீட் கேட்கவில்லை.
இப்போது அவர் இறந்து விட்டதால், வாய்ப்பு கேட்டனர். நியாயப்படி பார்த்தால் அவர்களுக்கு தான் கிடைத்திருக்க வேண்டும். என்ன செய்வது, குடும்ப அரசியல் என்ற ஆழி பெருங்கடலில் மூழ்கி இருக்கும் காங்கிரஸ் மேலிடம், பணம், அதிகார பலத்தால் சாமனுார் குடும்பத்திற்கே மீண்டும் சீட் கொடுத்து உள்ளது.
முழு மனது அதனால், காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த, முன்னாள் குஸ்தி வீரர் சாதிக் பயில்வானை, ஏதேதோ பேசி சமாதானப்படுத்தி உள்ளனர். இருப்பினும், அவர் ஒன்றும் முழு மனதுடன் சமர்த்துக்கு, ஆதரவு தெரிவித்த மாதிரி இல்லை. வேண்டாத வெறுப்பாகவே உள்ளார்.
இதுவரை சமர்த்துக்கு ஆதரவாக எங்கும் பிரசாரம் செய்யவில்லை. தங்கள் சமூக தலைவர்களை சந்தித்து, சமர்த்துக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் கேட்கவில்லை. அவரது மவுனம் மல்லிகார்ஜுன் தரப்பை கலங்கடித்து உள்ளது.
ஏன் என்றால் இதுவரை சாமனுார் சிவசங்கரப்பா வெற்றிக்காக, தோளோடு தோள் நின்று அனைத்து வேலையையும் செய்தவர் சாதிக் தான்.
இவர் களத்தில் இறங்கி வேலை பார்த்தால் தான், கண்டிப்பாக வெற்றி பெற முடியும். இதனால், சமர்த்துக்கு சாதிக் கை கொடுப்பாரா அல்லது, குஸ்தி போட்டியாக நினைத்து குத்து விடுவாரா என்று எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
வே ட்பாளர் பட்டியலில் சாதிக் பயில்வான் பெயரும் உள்ளதால், காங்கிர ஸ் மீதான அதிருப்தியில் இருக்கும் முஸ்லிம்கள், சாதிக் பயில்வானுக்கு ஓட்டு போடவும் வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்தத்தில் வெண்ணெய் உருகும் அளவுக்கு, தாவணகெரே அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது.
- நமது நிருபர் -
