ADDED : மே 27, 2026 12:00 AM

- நமது நிருபர் -
தங்கச் சுரங்கம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு உழைக்க கிடைத்த மனித இயந்திரங்கள், தமிழகத்தை சேர்ந்த தமிழர்கள்.
இங்கு முழுக்க முழுக்க தமிழர் நிறைந்த தங்கவயலாகவே காண முடிகிறது. கலை, கலாசார, பண்பாடு, அரசியல், என துறை தோறும் இன்று வரை தமிழக தாக்கம் இருந்து வருவதை காணலாம்.
தென்னிந்திய நல உரிமைச் சங்க நீதி கட்சி, சுயமரியாதை இயக்கம் ஆகியவை இணைந்து, சமூக நீதி, பகுத்தறிவு ஆகியவைகளுக்காக, 1944 ஆகஸ்டில் உருவானது தான் திராவிடர் கழகம்.
இக்கட்சி, அப்போதே தங்கவயலிலும் வேரூன்றியது. ஈரோட்டு ராமசாமி நாயக்கர், காஞ்சி அண்ணாதுரை ஆகியோருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 1947 செப்டம்பர் 17ல் உருவானது, தி.மு.க.,.
இவர்களின் கொள்கையும் கூட சமூக நீதி, மொழிப்பற்று, மாநில சுயாட்சி, சமத்துவம், ஹிந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போன்றவையே.
இதற்காகவே, தங்கவயலில் 1949ம் ஆண்டிலேயே, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், சாம்பசிவம், டி.கே.தாமரைவிழியன், சீராளன், தே.மோ.மாணிக்கம், எழிலன், ஜான் மைக்கேல், வாணியம்பாடி முனிசாமி.
மருதவாணன் எஸ்.கலையரசன், சின்னதுரை, நடராஜன், சுப்ரமணி, ஆதித்தன், குப்பன், அப்பாதுரை, செல்வராஜ், தட்சிணாமூர்த்தி, தங்கசத்தி, தம்பிதுரை, காசிநாதன், ஜெயராமன், பச்சையப்பன், கணேசன், தங்கராஜ் போன்றோர் தி.மு.க.,வை ஆரம்பித்தனர்.
தங்கவயல் டவுன் சபையில், தி.மு.க.,வில், 11 பேர் உறுப்பினர்களாக தேர்வாயினர். தேசிய கட்சிகளுக்கு நிகராக, மொழியுணர்வுக்காகவே அன்றைய மாணவர்கள் பெரும்பாலும் தி.மு.க.,வில் சேர்ந்தனர்.
தமிழகத்தில், 1957ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., 15 இடங்களில் வெற்றி பெற்றது. 1967ல் அண்ணாதுரை தலைமையில் ஆட்சி அமைத்தது. இதனால், தங்கவயலில் தி.மு.க.,வின் பலம் அதிகரித்தது.
தி.மு.க.,வின் வளர்ச்சியில் திரை நட்சத்திரங்கள் ஆதிக்கம் வலுவானது. அப்போதைய தி.மு.க.,வின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆருக்கும், தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான கட்சி நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்
1972ல் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க. வை ஏற்படுத்தினார்.
தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் உள்ள, 65 சதவீதத்திற்கும் அதிகமான, தி.மு.க.,வினர் கட்சியை விட்டு வெளியேறி, அ.தி.மு.க., வில் சேர்ந்தனர். 1973ல் திண்டுக்கல்லில் நடந்த சட்டசபை தேர்தல் மூலம் அ.தி.மு.க., வெற்றிப்பெற்று, சட்டசபை தேர்தலில் கால் பதித்தது.
கடந்த 1977ல் தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றியது. 1983ல் கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் மு.பக்தவச்சலத்தை போட்டியிட வைத்து, எம்.ஜி.ஆர்., தேர்தல் பிரசாரம் செய்தார். கர்நாடக மாநில அரசியலில் ஜாம்பாவானாக திகழ்ந்த சி.எம்.ஆறுமுகம் தோல்வி அடைய செய்தார்.
ஒரு முறைக்கு மூன்று முறை தங்கவயல் நகராட்சியை அ.தி.மு.க., கைப்பற்றியது. இதன் காரணமாக தேசிய கட்சிகள் தங்கவயலில் தலை தூக்க முடியாமல் போனது. கடந்த 1985ல் மார்க்சிஸ்ட் கம்யூ., இடத்தில் அ.தி.மு.க., ஒருமுறை தோல்வி அடைந்தது.
கடந்த, 1989ல் மீண்டும் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., இரண்டாவது முறையாக வெற்றிப்பெற்றது.
1994ல் அ.தி.மு.க., குடியரசு கட்சியிடம் தங்கவயலில் தோல்வி அடைந்தது. மீண்டும், 1999ல் அசெம்பிளிக்கு அ.தி.மு.க., ரீ என்ட்ரி ஆனது. அதன் பின், தங்கவயலில் அ.தி.மு.க., அசெம்பிளி தேர்தலில் வெற்றிப் பெறாமலே தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது.
கடந்த 2009ல் முதல் முறையாக பா.ஜ., வெற்றி பெற்றது. மீண்டும், 2014ல் வெற்றி பெற்றது. 2018ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது வரை காங்கிரஸ் கோலோச்சி வருகிறது. இது, தேசிய கட்சிகளின் ஆதிக்கமாக வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு பின், தமிழக அரசியல் தாக்கம், தங்கவயலில் சற்று சரிந்த நிலையை காண வைத்தது.
தமிழகத்தில், நடிகர் ஜோசப் விஜய் 2025 பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். சமத்துவம், சமய சார்பின்மை, சமூக நீதி ஆகியவைகளை கொள்கையாக கொண்டு புதிய கட்சி ஆரம்பித்த ஓராண்டில், 107 தொகுதிகளை இக்கட்சி வெற்றிப்பெற்று, தனிப்பெரும் சக்தியாக ஆட்சியை, 2026 மார்ச்சில் பிடித்துள்ளது.
அதுவரை தங்கவயலில் ஒரு சில இடங்களில் மட்டுமே விஜய் ரசிகர்கள் மன்றம் மற்றும் மக்கள் இயக்கம் ஆகியவை இருந்து வந்தன. ஆனால், தமிழகத்தில் த.வெ.க., ஆட்சியை பிடித்தவுடன், தங்கவயல் முழுவதிலும் விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கம், த.வெ.க., கட்சியாக வேர் பிடித்துள்ளது.
மாரிகுப்பம் முதல் பெமல் நகர் பகுதி வரை, த.வெ.க., வெற்றி பேனர்கள் முளைத்துள்ளன. விஜய் பெயரை சொன்னாலே ஓட்டுகள் குவியும் என்ற புதிய அலை எழுந்துள்ளது.
இதன் தீர்ப்பு தங்கவயல் நகராட்சி தேர்தல் நடந்தால், வெளிச்சத்திற்கு வந்து விடும்.
சமூக ஆர்வலர்கள் பலரும் விஜய் மோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், தங்கவயலிலும் அதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது. தங்கவயலில் தாங்குமா த.வெ.க., என்பது இங்கு தேர்தல் நடந்தால் தெரிந்து விடும்!
