/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'தங்கபூமி'யில் நகராட்சி தேர்தல் நடக்குமா?
/
'தங்கபூமி'யில் நகராட்சி தேர்தல் நடக்குமா?
ADDED : மே 20, 2025 11:33 PM

கர்நாடகாவில் 61 நகராட்சிகள், 116 டவுன் சபைகள், 10 மாநகராட்சிகள், 97 டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன.
கோலார் மாவட்டத்தில் பெரிய நகராட்சியாக விளங்குவது தங்கவயல் நகராட்சி தான். இதன் பரப்பளவு 58.12 சதுர கிலோ மீட்டர். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே சுற்றுப்புற சூழல் சுகாதாரத்தை கவனிக்க, தங்கவயலில் 'சானிட்டரி போர்டு' அமைப்பு இருந்தது. இந்த அமைப்பில் ஐந்து டிவிஷன்கள் அமைக்கப்பட்டன. இதை, 1964ல் 'டவுன் சபை'யாக மாற்றினர். இதில் 28 பேர் கவுன்சிலர்களாக இருந்தனர். 1983ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் கவுன்சிலர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.
விரிவாக்கம்
நகராட்சி எல்லை 2000ம் ஆண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இவ்வேளையில் வார்டுகள் எண்ணிக்கை 35 ஆக உயர்த்தப்பட்டது. இதில், பெமல் நகர் 1, 2 என இரண்டு வார்டுகள்; தங்கச் சுரங்க குடியிருப்பு பகுதிகளில் இருந்த வார்டு எண் 3 முதல் 18 வரையிலான வார்டுகள்; நகராட்சி எல்லையில் இருந்த 17 வார்டுகள் இணைக்கப்பட்டன.
தங்கவயல் டவுன் சபைக்கு முதல் பொதுத் தேர்தல் 1968 ல் நடத்தப்பட்டது. கடைசியாக, 14வது பொதுத்தேர்தல் 2019 நவம்பரில் நடந்தது. இந்த கால கட்ட நகராட்சியின் பதவி காலம் 2024 நவம்பரில் முடிந்திருக்க வேண்டும். ஆனால், நகராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல், 11 மாதம் கழித்து 2020 அக்டோபரில் தான் நடந்தது.
நகராட்சி தலைவரின் பதவிக் காலம் தலா இரண்டரை ஆண்டுகள். இதன்படி இரு தலைவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதல் தலைவர் 2020 அக்டோபர் முதல் 2023 ஏப்ரல் வரை பதவி காலம். இதற்குள் இரண்டாவது கட்ட தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜாதி இட ஒதுக்கீடை அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒரு வழியாக வழக்குகள் முடிவுக்கு வந்தது.
தாமதம்
கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவு படி, இரண்டாம் கட்ட தலைவர், துணைத் தலைவர் தேர்தல் 2025 மார்ச்சில் தேர்தல் நடந்தது. இதனால், 22 மாதம் மக்கள் பிரதிநிதி இல்லாமல் கலெக்டர் தலைமையில் நகராட்சி செயல்பட்டது. லேட்டாக தேர்தல் நடந்ததால், இரண்டாம் கட்ட தலைவர் பதவி காலம் எட்டு மாதம் மட்டுமே உள்ளது. வழக்கமாக 2025 செப்டம்பரில் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கர்நாடகாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் மாநில நகராட்சித்துறை மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.
நகராட்சி பொது தேர்தல் நடத்த முதலில் வார்டுகளுக்கான ஜாதி இட ஒதுக்கீடு தயார் செய்ய வேண்டும்.
தொகுதி எம்.எல்.ஏ., ஆலோசனை பெற வேண்டும்; அதன் பின், அரசுக்கு அனுப்பப்படும். வாக்காளர்கள் ஆட்சேபனைகளுக்கு கால கெடு விதிக்கப்படும். அதன் பின்னரே, தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும்.
வாடிக்கை
இதுவரையிலும் தங்கவயல் நகராட்சிக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டதே இல்லை. ஏதாவது ஒரு காரணத்தைக் காண்பித்து தேர்தல் தள்ளிப் போடப்படுவது வாடிக்கை. அதே யுக்தியை இம்முறையும் கையாளலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தங்கவயல் நகராட்சியின் இரண்டாம் கட்ட தலைவர் பதவி காலம் குறுகிய அளவே இருப்பதால், அவர் தரப்பில் வழக்கு தொடரவும் வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் தேர்தல் நடத்தப்படாத சூழ்நிலை ஏற்படுவது உறுதி.
இருந்த போதிலும் கவுன்சிலர் ஆகவேண்டும் என்று ஆர்வம் உள்ள அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் வார்டுகளில் மூட்டை அரிசி, வேட்டி, சேலைகள் நோட்டு புத்தகம், நிதியுதவி, பரிசு பொருட்கள் என வாரி வழங்கி நகரில் வலம் வருகின்றனர்.
கடந்த நகராட்சி தேர்தலின் போது, ஓராண்டுக்கும் மேலாக இளைஞர்களுக்கு விருந்து நடத்தினர்.
ஓட்டுக்காக டோக்கன் அட்வான்ஸ் வழங்கும் வேலையும் நடந்து வருகிறது.
- நமது நிருபர் -