/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்து அரசு - கவர்னர் இடையே மீண்டும் இணக்கம் ஏற்படுமா?
/
சித்து அரசு - கவர்னர் இடையே மீண்டும் இணக்கம் ஏற்படுமா?
சித்து அரசு - கவர்னர் இடையே மீண்டும் இணக்கம் ஏற்படுமா?
சித்து அரசு - கவர்னர் இடையே மீண்டும் இணக்கம் ஏற்படுமா?
ADDED : ஜன 28, 2026 06:41 AM
பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், கவர்னர்கள் மூலம் அரசுகளுக்கு, மத்திய அரசு தொல்லை கொடுப்பதாக கடந்த, 11 ஆண்டுகளாகவே எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.
த மிழகம், கேரளாவில் அரசுக்கும் - கவர்னர்களுக்கும் இடையே, மோதல் போக்கு நீடிக்கிறது.
தமிழக சட்டசபையில் அரசு எழுதி கொடுக்கும் உரையை படிக்காமல், அம்மாநில கவர்னர் ரவி வெளிநடப்பு செய்தார்.
மத்திய அரசின் பேச்சை கேட்டு, தங்கள் அரசுக்கு எதிராக செயல்படுவதாக, ஆட்சியில் இருக்கும் தி.மு.க., கூறினாலும், அவர்களும் நிறைய முறை கவர்னரை அவமதிப்பு செய்து உள்ளனர்.
உரிய மரியாதை கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது முதல், அரசுக்கும் - கவர்னருக்கும் இடையே, எந்த மோதலும் இல்லாமல் இருந்தது. அரசின் மசோதாக்களுக்கு கவர்னர் கையெழுத்து போட்டு வந்தார்.
ஆனால், முடா வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட்டதாலும், இந்த முடிவை ஆளும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்ததாலும் பிரச்னை ஏற்பட்டது.
இதன்பின், மசோதாக்களில் கையெழுத்து போடாமல் கவர்னர் திருப்பி அனுப்பியதால், பிரச்னை ஏற்பட்டது.
கவர்னர் எடுக்கும் அதிரடி முடிவுகளை, சித்தராமையா விமர்சனம் செய்தாலும், கவர்னருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று, அவர் நினைக்கவே இல்லை. கவர்னரு க்கு உரிய மரியாதையை தொடர்ந்து அளிக்கிறார்.
தேநீர் விருந்து கடந்த, 22ம் தேதி, ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது. அதில், கவர்னர் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் சில பத்திகள், அரசு தயாரித்த கவர்னர் உரையில் இருந்ததால், கவர்னர் கெலாட் ஒரு சில வரிகள் மட்டும் படித்து விட்டு, அரசு எழுதி கொடுத்த உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்தார்.
அப்போதும் அவரை வாசல் வரை சென்று வழியனுப்பி விட்டு வந்தார் சித்தராமையா. நேற்று முன்தினம் நடந்த குடியரசு தின விழாவிலும், கவர்னரை இன்முகத்துடன் வரவேற்றார் முதல்வர்.
கவர்னர் அளித்த தேநீர் விருந்திலும் கலந்து கொண்டார். எஸ்.சி., சமூகத்தை சேர்ந்த கெலாட், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக இருந்தவர்.
அந்த நேரத்தில் இருந்தே அவருக்கும், சித்தராமையாவுக்கும் நல்லுறவு உள்ளது. அரசியலமைப்பு சட்டம் பற்றி கவர்னருக்கு நன்கு தெரியும் என்று, பல முறை அவரை பாராட்டியும் உள்ளார் சித்தராமையா.
தமிழகத்தை போன்று முதல்வர் - கவர்னர் இடையே நீயா, நானா என்ற மனப்பான்மை, சித்தராமையா - கெலாட் இடையில் இல்லை.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி, மீண்டும் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே, மாநில மக்கள் எண்ணமாக உள்ளது.
- நமது நிருபர் -

