/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விஜயேந்திராவின் தலைவர் பதவி நீடிக்குமா?
/
விஜயேந்திராவின் தலைவர் பதவி நீடிக்குமா?
ADDED : ஏப் 22, 2026 01:37 AM

- நமது நிருபர் -
கர்நாடக பா.ஜ., தலைவராக கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் விஜயேந்திரா பொறுப்பு ஏற்றார். இவர், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் 2வது மகன் ஆவார். ஷிவமொக்காவின் ஷிகாரிபுரா எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளார். அவருக்கு தற்போது 50 வயது தான் ஆகிறது.
இளம் தலைவரான அவருக்கு, கட்சியின் பெரிய பொறுப்பான மாநில தலைவர் பதவியை கொடுத்தது, கட்சியின் மூத்த தலைவர்கள் கண்ணை உறுத்தியது.
அவரை பதவியில் இருந்து இறக்கி விட, பல தலைவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் எடியூரப்பாவின் செல்வாக்கால் விஜயேந்திராவை எதுவும் செய்ய முடியவில்லை. இவர் தலைவராக பொறுப்பு ஏற்ற பின், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டை கண்டித்து, பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். இதனால் அமைச்சர் பதவியில் இருந்து நாகேந்திரா, ராஜினாமா செய்ய நேரிட்டது.
'முடா' முறைகேடு வழக்கில் ஆளுங்கட்சிக்கு எதிராக பாதயாத்திரை நடத்தி, கட்சி மேலிட 'குட் புக்'கில் இடம் பிடித்தார். ஆனால் தேர்தல் அரசியலில் இவரது செயல்பாடு மெச்சத்தக்கும் வகையில் இல்லை. இவர் தலைமையில் சண்டூர், சென்னப்பட்டணா, ஷிகாவி இடைத்தேர்தலை பா.ஜ., - ம.ஜ.த., சந்தித்தது. மூன்றிலும் தோல்வி அடைந்தனர்.
கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலிலும் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியால் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 2019 தேர்தலில் பா.ஜ., மட்டும் 25 தொகுதிகளில் வென்று இருந்தது.
விஜயேந்திரா தலைவராக பொறுப்பு ஏற்று, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வந்தால் 3 ஆண்டுகள் ஆகி விடும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் மாற்றம் நடப்பது பா.ஜ.,வில் உள்ளது.
தலைவர் பதவியை தக்க வைத்து கொண்டு, 2028 தேர்தலை தனது தலைமையில் கட்சி சந்திக்க வேண்டும் என்று நினைத்தால், விஜயேந்திரா இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம்.
இது ஒரு புறம் இருக்க, விஜயேந்திராவின் தலைவர் பதவி நீடிக்குமா, நீடிக்காதா என்பதற்கு, வரும் 4ம் தேதி விடை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
இடைத்தேர்தல் நடந்து உள்ள தாவணகெரே தெற்கு, பாகல்கோட் தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றால், விஜயேந்திரா மவுசு அதிகரிக்கும்.
அதிலும் காங்கிரஸ் கோட்டையான தாவணகெரே தெற்கில் வெற்றி பெற்றால், விஜயேந்திரா பலம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஒரு வேளை இரண்டு தொகுதியிலும் தோற்றால், அவரது தலைவர் பதவி கேள்விக்குறி தான் என்று, கட்சிக்குள் பேச ஆரம்பித்து உள்ளனர்.

