/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வினய் குல்கர்னிக்கு ஜாமின் கிடைக்குமா? விசாரணை தள்ளி வைப்பால் விரக்தி
/
வினய் குல்கர்னிக்கு ஜாமின் கிடைக்குமா? விசாரணை தள்ளி வைப்பால் விரக்தி
வினய் குல்கர்னிக்கு ஜாமின் கிடைக்குமா? விசாரணை தள்ளி வைப்பால் விரக்தி
வினய் குல்கர்னிக்கு ஜாமின் கிடைக்குமா? விசாரணை தள்ளி வைப்பால் விரக்தி
ADDED : ஜன 09, 2026 06:32 AM

பெங்களூரு: மாவட்ட பஞ்சாயத்து பா.ஜ., கவுன்சிலர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை, கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளிவைத்ததால், சிறையில் இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி விரக்தி அடைந்துள்ளார்.
தார்வாட் மாவட்டம், ஹெப்பள்ளி மாவட்ட பஞ்சாயத்து பா.ஜ., கவுன்சிலராக இருந்தவர் யோகேஷ் கவுடா. இவர், 2016 ஜூன் 15ம் தேதியன்று காலை, தன் உடற் பயிற்சி மையத்தில் இருந்த போது, மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
சி.பி.ஐ., விசாரணை ஆரம்பத்தில் இந்த வழக்கை தார்வாட் துணை நகர் போலீசார் விசாரணை நடத்தி, சிலரை கைது செய்தனர். 2020ல் பா.ஜ., அரசு அமைந்ததும், யோகேஷ் கவுடா கொலை வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது.
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, கொலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னிக்கு தொடர்பிருந்ததை கண்டுபிடித்தனர். 2020 நவம்பர் 5ல், அவரை கைது செய்தனர்.
அவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் மறுத்ததால், பல மாதங்கள் சிறையில் இருந்தார். அதன்பின், உச்சநீதிமன்றத்தை நாடினார். அங்கு அவருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
இதனால், வினய் குல்கர்னி, தார்வாட் மாவட்டம் செல்வதில்லை. 2023ல் சட்டசபை தேர்தலில், தார்வாடில் போட்டியிட்ட போதும், அவர் பிரசாரத்துக்கு செல்ல முடியவில்லை. அவருக்காக மனைவி பிரசாரம் செய்தார்.
மீண்டும் சிறை இடைக்கால ஜாமினில் இருந்த வினய் குல்கர்னி, சாட்சிகளுக்கு பணத்தாசை காட்டி, தனக்கு ஆதரவாக மாற்ற முயற்சித்ததாக கூறப்பட்டது. இதை கவனித்த சி.பி.ஐ., அதிகாரிகள், உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
நீதிமன்றமும் வினய் குல்கர்னிக்கு அளித்த ஜாமினை ரத்து செய்தது. அதன்பின் மீண்டும் கைது செய்யப்பட்டார். தற்போது பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமின் கேட்ட போது, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தை நாடும்படி கூறியது. அதன்பின் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அங்கு அவரது மனு தள்ளுபடியானதால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு நீதிபதி சுனில்குமார் தத் யாதவ் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.
சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான சிறப்பு வக்கீல் பிரசன்ன குமார், ''ஜாமின் நிபந்தனைகளை மனுதாரர் வினய் குல்கர்னி மீறியுள்ளார். சாட்சிகள் விசாரணை முடிந்துள்ளது என்பதால், ஜாமின் பெற சரியான காரணம் இல்லை.
''வழக்கு தொடர்பான சாட்சியங்களை மிரட்டியதால், அவரது ஜாமின் ரத்தானது. இப்போது சூழ்நிலை மாறியுள்ளது என்று கூறி, ஜாமின் கோரியுள்ளார்.
''எனவே, அவரது மனுவை நிராகரிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் ஜாமினை ரத்து செய்திருப்பதே, அவர் ஜாமினுக்கு தகுதியானவர் அல்ல என்பதற்கு சான்று,'' என்று வாதிட்டார்.
வினய் குல்கர்னி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் நாகேஷ், ''வழக்கில் மற்ற குற்றவாளிகள் ஜாமின் பெற்றுள்ளனர். வினய் குல்கர்னிக்கு ஏன் ஜாமின் மறுக்கப்படுகிறது,'' என, கேள்வி எழுப்பினார்.
வாத, பிரதிவாதங்களை கேட்ட நீதிபதி, விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தார். ஜாமின் கிடைப்பது தள்ளிப்போவதால், வினய் குல்கர்னி விரக்தி அடைந்துள்ளார்.

