கணவரின் சிகிச்சைக்காக வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது
கணவரின் சிகிச்சைக்காக வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது
ADDED : மார் 01, 2026 04:57 AM

ஜீவன்பீமாநகர்: பெங்களூரு ஜீவன்பீமாநகர் செல்லகட்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில், பிரபல அறுவை சிகிச்சை நிபுணர், தன் குடும்பத்தினருடன் வசிக்கிறார்.
இவர்கள் வீட்டில் உள்ள சிறிய அறையில் வெள்ளி பொருட்களை வைத்திருந்தனர். பண்டிகை நேரத்தில் மட்டும் வெளியே எடுத்து பயன்படுத்தி வந்தனர்.
கடந்த மாதம் சங்கராந்தி பண்டிகையை ஒட்டி, வெள்ளி பொருட்களை எடுக்க சென்ற போது, வெள்ளி பொருட்கள், பாத்திரங்கள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஜனவரி, 28 ம் தேதி போலீசில் புகார் செய்தனர். தங்களிடம் வேலைக்காரியாக பணியாற்றி வேலையை விட்ட, முருகேஷ்பாளையாவில் வசிக்கும் சைத்ரா, 28 மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதனால், சைத்ராவின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்தனர். அவர், ஒரு நகைக்கடையில் அடிக்கடி வெள்ளி பொருட்களை விற்றது தெரிந்தது. கடந்த வியாழக்கிழமை அவரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கணவரின் மருத்துவ செலவுக்காக, வேலை செய்த வீட்டில் இருந்து வெள்ளி பொருட்கள், நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
அவர் கொடுத்த தகவலின்படி மூன்று கடைகளில் விற்கப்பட்ட 12.50 கிலோ வெள்ளி பொருட்கள், 75 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன. இவற்றின் மதிப்பு 35 லட்சம் ரூபாய்.
