ADDED : மே 21, 2026 10:05 PM
விஜயபுரா: மழையால் சிதிலமடைந்த வீட்டின் கூரை இடிந்ததில், மனைவி உயிரிழந்தார். வெளியே படுத்திருந்த கணவர் உயிர் தப்பினார்.
விஜயபுரா மாவட்டம், நிடகுந்தியின் கவுரேஸ்வரர் கோவில் அருகே வசிப்பவர் சிவானந்தா, 60. இவரது மனைவி மஹாதேவி, 55. சில நாட்களாக விஜயபுரா மாவட்டத்தில், மழை பெய்து வருகிறது. நிடகுந்தியிலும் மழை பெய்ததால், சிவானந்தாவின் வீடு சிதிலமடைந்திருந்தது.
இந்நிலையில், இரவில் வீட்டுக்குள் காற்று வரவில்லை என்பதால், சிவானந்தா வீட்டின் வெளியே உறங்குவது வழக்கம். அதே போன்று நேற்று முன் தினம் இரவும் படுத்திருந்தார். மனைவி மட்டும் வீட்டுக்குள் உறங்கி கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை வீட்டின் கூரை, திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி, மஹாதேவி உயிரிழந்தார். கணவர் வெளியே படுத்திருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தகவலறிந்து அங்கு வந்த, நிடகுந்தி போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
