ADDED : ஏப் 05, 2026 04:00 AM
யாத்கிர்: காதல் விவகார தகராறில், பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
யாத்கிர் ரூரல் எரகோல் கிராமத்தில் வசிப்பவர் பசப்பா நிங்கப்பா, 25. இவரும், அதேகிராமத்தில் வசிக்கும், 22 வயது இளம்பெண்ணும் காதலித்தனர். சில தினங்களுக்கு முன் இருவரும் தனிமையில் சந்தித்து பேசினர். இதனை பெண்ணின் உறவினரான, 40 வயது பெண் பார்த்து விட்டார். இளம்பெண் வீட்டிற்கு சென்று, பெற்றோரிடம் போட்டு கொடுத்தார். இதனால், இளம்பெண்ணை அவரது பெற்றோர் கண்டித்தனர்.
நேற்று முன்தினம் மாலை, 40 வயது பெண் இயற்கை உபாதை கழிக்க திறந்தவெளி பகுதிக்கு நடந்து சென்றார். அங்கு வந்த பசப்பா, காதல் விவகாரத்தை போட்டு கொடுத்தது ஏன் என்று கேட்டு தகராறு செய்தார். பெண்ணை வலுக்கட்டாயமாக புதருக்குள் இழுத்து சென்றார்.
பின், தன் நண்பர் ராட்டேப்பா, 30 என்பவரையும் அங்கு வரவழைத்தார். இருவரும் சேர்ந்து பெண்ணை பலாத்காரம் செய்தனர். வெளியே கூறினால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டினர்.
தனக்கு நேர்ந்த கொடுமையை கணவரிடம் கூறி பெண் அழுதார். அவருக்கு ஆறுதல் கூறிய கணவர், பசப்பா, ராட்டேப்பா மீது யாத்கிர் ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். நேற்று மதியம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
