'டிரெக்கிங்'கில் மாயமான பெண் 3 நாளுக்கு பின் பத்திரமாக மீட்பு
'டிரெக்கிங்'கில் மாயமான பெண் 3 நாளுக்கு பின் பத்திரமாக மீட்பு
ADDED : ஏப் 06, 2026 04:39 AM

குடகு: கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் சரண்யா, 36. குடகு மாவட்டம், மடிகேரிக்கு, கடந்த 1ம் தேதி சுற்றுலா வந்தார். ஹோம் ஸ்டேயில் தங்கியிருந்த அவர், கடந்த 2ம் தேதி காலை சுற்றுலா பயணியர் சிலருடன், தடியண்டமோல் மலைக்கு, டிரெக்கிங் சென்றார். மற்றவர்கள் திரும்பி வந்த நிலையில், சரண்யா மட்டும் மாயமானார்.
கடந்த 3ம் தேதியில் இருந்து, அவரை வனப்பகுதிக்குள் தேடும் பணி நடந்தது. இரண்டு நாட்கள் தேடியும் அவரை பற்றி எதுவும் தெரியவில்லை. நேற்று 3வது நாளாக தேடுதல் பணி நடந்தது. மோப்ப நாய்கள், 'ட்ரோன்' கேமராக்கள் உதவியுடன் வனத்துறையினர் தேடினர். வனத்தில் வசிக்கும் ஆதிவாசி சமூக மக்கள் சிலரும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நேற்று மாலை 5:00 மணியளவில் வனப்பகுதிக்குள் இருந்த ஒரு பாழடைந்த வீட்டில், சரண்யா உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு தண்ணீர், பிஸ்கட் கொடுத்து வனத்துறையினர் ஆசுவாசப்படுத்தினர். பின், வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
வழிதவறி சென்ற சரண்யா திரும்பி வர முடியாமல், பாழடைந்த வீட்டில் தங்கியுள்ளார். டிரெக்கிங் செல்லும் போது எடுத்து சென்ற பிஸ்கட், வாழை பழங்களை சாப்பிட்டும், தண்ணீர் குடித்தும் மூன்று நாட்களை கழித்து உள்ளார். ஏற்கனவே பல டிரெக்கிங் சென்ற அனுபவம் உள்ளதால், மன உறுதியை அவர் இழக்கவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
