பெண் எஸ்.ஐ., கன்னத்தில் 'பளார்' ; பா.ஜ., - எம்.எல்.ஏ., மகள் மீது வழக்கு
பெண் எஸ்.ஐ., கன்னத்தில் 'பளார்' ; பா.ஜ., - எம்.எல்.ஏ., மகள் மீது வழக்கு
ADDED : ஆக 15, 2026 01:01 AM

மாண்டியா: கோவில் கருவறைக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வதை தடுத்த விவகாரத்தில், பணியில் இருந்த பெண் எஸ்.ஐ.,யை கன்னத்தில் அறைந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா மகள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
துமகூரு ரூரல் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா. இவரது மகள் ஐஸ்வர்யா, 36. இவர், தன் கணவர், இரண்டு மகள்களுடன், கடந்த 12ம் தேதி, மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள உக்கடா கோவிலுக்கு பீமன அமாவாசை ஆரத்தியில் பங்கேற்க சென்று இருந்தார்.
எம்.எல்.ஏ., வின் மகள் என்பதால் அவரிடம் வி.ஐ.பி., பாஸ் இருந்தது. கருவறைக்கு அருகில் ஐஸ்வர்யா சென்ற போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் எஸ்.ஐ., சவிதா, ஐஸ்வர்யாவை நிறுத்தினார்.
'கருவறை பகுதியில் நிறைய பக்தர்கள் உள்ளனர். நீங்களும் சென்றால் பிரச்னை செய்வர். கொஞ்ச நேரம் பொறுமையாக காத்திருங்கள்' என்றார்.
இந்த நேரத்தில் மப்டியில் இருந்த இன்ஸ்பெக்டர் லட்சுமி கருவறைக்குள் சென்றார். இதை பார்த்து கோபம் அடைந்த ஐஸ்வர்யா, சவிதாவிடம் வாக்குவாதம் செய்தார். லட்சுமியை தன் உயர் அதிகாரி என்று சவிதா கூறியும், ஐஸ்வர்யா கேட்கவில்லை.
ஒரு கட்டத்தில் சவிதாவை தகாத வார்த்தையால் திட்டி, அவரது கன்னத்தில் ஐஸ்வர்யா அறைந்தார். இதுகுறித்து சவிதா அளித்த புகாரில் ஐஸ்வர்யா மீது கியாதனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா கூறுகையில், ''என் மகள் அவரது குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றார்.
''அவரை கருவறைக்குள் எஸ்.ஐ., அனுமதிக்கவில்லை என்று சொல்கின்றனர். அங்கு என்ன நடந்தது என எனக்கு தெரியாது.
''இருந்தாலும் எனது சார்பில் மன்னிப்பு மன்னிப்பு கேட்கிறேன். நாம் பொது வாழ்வில் உள்ளோம். அப்படி நடந்திருக்க கூடாது. என் மகள் தவறு செய்திருந்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டும். வழிபாட்டு தலங்களில் வி.ஐ.பி., முறை நீக்கப்பட வேண்டும். கடவுள் முன்பு அனைவரும் சமம்,'' என்றார்.
