ADDED : மார் 10, 2026 05:52 AM

கலபுரகி: ஸ்ரண பசவேஸ்வரா தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில், கீழே விழுந்த பெண்ணின் கால்களில் தேர் சக்கரம் ஏறியதில், இரண்டு கால்களும் துண்டாகின.
கலபுரகி மாவட்டம் யதரமி தாலுகா அரகுந்தகி கிராமத்தில் சரண பசவேஸ்வரா தேர் திருவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. இவ்விழாவை காண, அக்கம் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
தேரை வடம்பிடித்து பக்தர்கள் பலரும் இழுத்தனர். திடீரென கட்டுப்பாட்டை இழந்த தேர், வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொது மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.
இதனால், ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், அதே கிராமத்தை சேர்ந்த நாகம்மா என்பவர் கீழே விழுந்தார்.
அப்போது தேரின் சக்கரம் நாகம்மாவின் இரு கால்களிலும் ஏறியதில், இரு கால்களும் துண்டாகின. படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
யதரமி போலீசார் விசாரிக்கின்றனர்.
