மஞ்சள் 'அலெர்ட்!': கர்நாடகாவில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு
மஞ்சள் 'அலெர்ட்!': கர்நாடகாவில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு
ADDED : செப் 20, 2026 11:22 PM

கர்நாடகாவில் நடப்பாண்டு உரிய நேரத்தில் தென் மேற்கு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் அணைகளில் நீர் வரத்தும், நீர் மட்டமும் குறைந்து வருகிறது. மாநில அரசு, குடிநீருக்கு தவிர, விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
இதனால், முதற்கட்டமாக, 101 தாலுகாக்களும், இரண்டாம் கட்டமாக 24 தாலுகாக்களும் வறட்சி பாதிக்கப்பட்ட தாலுகாக்களாக அறிவித்த மாநில அரசு, மேலும், 52 தாலுகாக்கள் வறட்சி பட்டியலில் சேர உள்ளதாகவும், மேலும் 50 தாலுகாக்களில் கள ஆய்வு நடந்து வருகிறது.
இதன் மூலம் மாநிலத்தில், 200க்கும் மேற்பட்ட தாலுகாக்கள் வறட்சி பட்டியலில் சேர, வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை மையம் பெங்களூரு பிரிவு வெளியிட்டு உள்ள அறிக்கை:
வங்காள விரிகுடாவின் வடமேற்கு, மேற்கு மத்திய பகுதி, அதை ஒட்டியுள்ள ஆந்திரா, -ஒடிஷா கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்கிறது.
வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் மேற்கு பருவமழை காலத்தின் இறுதி பகுதியாகும். இ ம்மாத இறுதியில் பருவமழை காலம் முடியும் என்றாலும், புதிய குறைந்த அழுத்த மண்டல ம் உருவாகி உள்ளது.
இதனால், மாநிலத்தின் வடக்கு உட்பகுதி, தெற்கு உட்பகுதி, கடலோர பகுதிகளில், வரும் 24ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் லேசான மழை பெய்யும்.
உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி, பெலகாவி, தார்வாட், ஹாவேரி, கதக், பீதர், கலபுரகி, ஷிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன், குடகு, பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு நகர மாவட்டத்தில், 30 - 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது.
எனவே, பொது மக்கள், வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகளை கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளவும்.
அதேவேளையில், வரும் நாட்களில் வங்காள விரிகுடாவில் உருவாகும் வானிலை மாற்றத்தை பொறுத்து, மாநிலத்தில் மழை பொழிவின் அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை சாந்தி நகர், வசந்த் நகர், மெஜஸ்டிக், கோரமங்களா, சிட்டி மார்க்கெட், மல்லேஸ்வரம், யஷ்வந்த்பூர், ஜெயநகர், விஜயநகர், ஜே.பி.நகர், ராஜாஜி நகர், சந்திரா லே - அவுட், நாகர்பாவி, சுங்கதகட்டே, காமாட்சிபாளையா, பசவேஸ்வர நகர், ஹெப்பால் உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. பெங்களூரில் நேற்று வெப் பநிலை 31 டிகிரி செல்ஷியஸ், குறைந்தபட்சம் 21 டிகிரி செல்ஷியஸ் என பதிவாகி இருந்தது. இன்றும் இதே வெப்பநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
