வெளிச்சத்துக்கு வந்த யோகேஸ்வரின் குடும்ப பிரச்னை
வெளிச்சத்துக்கு வந்த யோகேஸ்வரின் குடும்ப பிரச்னை
ADDED : மே 19, 2026 11:30 PM

- நமது நிருபர் -:
சென்னப்பட்டணா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., யோகேஸ்வரின் குடும்ப சண்டை வீதிக்கு வந்துள்ளது. தந்தை, மகள் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தந்தை மீது மகள் நிஷா பல குற்றசாட்டுகளை வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை, யோகேஸ்வர் மறுத்துள்ளார்.
யோகேஸ்வருக்கும், அவரது முதல் மனைவியின் மகள் நிஷாவுக்கும் மனக்கசப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தன் தந்தை மீது நிஷா, அவ்வப்போது குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்.
வெளிநாட்டில் படித்து விட்டு வந்த தனக்கு, நல்ல வேலை கிடைத்தும், அதை கிடைக்கவிடாமல் தடுத்தார் என, ஊடகங்கள் முன்னிலையில், கண்ணீர் சிந்தினார்.
தன் தந்தை யோகேஸ்வரால் ஏற்படும் தொந்தரவுகள் குறித்து. துணை முதல்வர் சிவகுமாரிடம் நிஷா புகார் அளித்திருந்தார்.
யோகேஸ்வர் கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன்பே, முதல் மனைவி மஞ்சுளாவை, விவாகரத்து செய்துவிட்டார். மஞ்சுளாவும், மகள் நிஷாவும் தனியாக வசிக்கின்றனர். யோகேஸ்வர் தன் இரண்டாவது மனைவியுடன், வாழ்க்கை நடத்துகிறார்.
கடந்த வாரம் யோகேஸ்வரின் சொந்த ஊரான, சக்கரே கிராமத்தில், அவரது குல தெய்வமான பட்டாலம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் பங்கேற்க மஞ்சுளாவும், நிஷாவும் கிராமத்துக்கு சென்றனர். திருவிழா என்பதால் அங்குள்ள பூர்வீக வீட்டுக்கு சென்று பூஜை செய்யலாம்; சமைத்து சாப்பிடலாம் என்ற விருப்பத்தில் சென்றனர்.
ஆனால், யோகேஸ்வர் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். இதை கண்டு மஞ்சுளாவும், நிஷாவும் வருத்தம் அடைந்தனர்.
நீண்ட நேரம் காத்திருந்தும், வீட்டுக்கு செல்ல அனுமதி கிடைக்காத காரணத்தால், வீட்டு வாசலில் அமர்ந்து, இருவரும் உணவருந்தும் நிலை ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த நிஷா, 'திருவிழா நாளன்றும் எங்களை வீட்டில் அனுமதிக்கவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்கவும் விடவில்லை' என வருந்தினார்.
இது, சமூக வலைதளத்தில் பரவியது. இதுவரை இலைமறை காயாக இருந்த, யோகேஸ்வரின் குடும்ப பிரச்னை, இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து, யோகேஸ்வர் கூறியதாவது:
என் மகள், என் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். அவரது தாய்க்கும், எனக்கும் விவாகரத்தாகி 25 ஆண்டுகளாகின்றன. இத்தனை ஆண்டுக்கு பின், என் மீது குற்றம் சுமத்துவதன் பின்னணியில், அரசியல் நோக்கம் உள்ளது. என் கவுரவத்துக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
என் மகள், அரசியல் எதிரிகளுடன் சேர்ந்து, என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். இது பொன்ற பொய்களை, பொது மக்கள் நம்பக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
