ADDED : மே 14, 2026 12:09 AM

- நமது நிருபர் -:
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில், துாத்சாகர் நீர் வீழ்ச்சி உள்ளது. இது கோவாவின் எல்லைப்பகுதியில் உள்ளது.
இந்த அருவி அமைந்துள்ள பகுதியில் மலையேற்றத்துக்கு அனுமதி உண்டு. இதற்கு வனத்துறையினரிடம் அனுமதி கட்டாயம். மது, தீப்பெட்டி, சிகரெட் போன்றவற்றை எடுத்து செல்ல அனுமதியில்லை.
மழைக்காலத்தில் பாதுகாப்பு காரணங்கள் கருதி, டிரெக்கிங் செல்ல அனுமதி வழங்கப் படுவதில்லை.
அக்டோபர் முதல் மே மாதம் வரையிலான காலம் நீர்வீழ்ச்சியை ரசிக்க உகந்த காலம். நீர்வீழ்ச்சியை சுற்றியும் பசுமையான மரங்கள் உள்ளன. டிரெக்கிங் செல்வோருக்கு சிறந்த அனுபவமாக இருக்கும்.
மண்டோவி ஆற்றில் இருந்து கொட்டும் நீர்வீழ்ச்சி 1,017 அடி உயரத்தில் இருந்து பாய்கிறது. மலை உச்சியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கீழே கொட்டுவதை பார்க்க, பால் ஊற்றுவது போன்று தோன்றும்.
இந்த அருவியில் குளிப்பதற்கு அனுமதி உண்டு. காலை 8:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை குளிக்கலாம்.
இந்த பகுதிக்கு அருகில் பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு பல வகை விலங்குகள், பறவைகள் உள்ளன. இவற்றை உற்சாகமாக பார்த்து ரசிக்கலாம்.
ரயிலில் குகைகளுக்கு இடையே 11 கி.மீ., பயணித்து கொண்டே ரசிக்கலாம். இந்த அருவியை நாள் முழுக்க பார்த்து கொண்டே இருந்தாலும் சலிப்பு தட்டாது.
