ADDED : மார் 01, 2026 05:15 AM

பெங்களூரு: தனக்கு அல்பாயுசு என, ஜோதிடர் கூறியதை நம்பிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு பாகல்குன்டேவில் வசிக்கும் தம்பதி உமேஷ், கவிதா. இவர்களின் இரண்டாவது மகள் வித்யாஜோதி, 29. தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றினார். சமீப நாட்களாக வீட்டிலிருந்தபடியே பணியாற்றி வந்தார்.
இவரும், குடகு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் சில ஆண்டுகளாக காதலித்தனர். இவர்களின் காதலை இரண்டு குடும்பங்களும் ஏற்றுக்கொண்டன. திருமண ஏற்பாடுகளையும் கவனித்தனர். அடுத்த சில நாட்களில் திருமணம் நடக்கவிருந்தது.
இதற்கிடையே, வித்யா ஜோதியின் குடும்பத்தினர், ஜாதகம் பார்த்தனர். அப்போது, 'வித்யாஜோதிக்கு ஆயுள் பலம் குறைவு; விரைவில் இறந்து விடுவார்' என, ஜோதிடர் கூறியுள்ளார். ஆயுள் நீட்டிப்புக்கு, ஒன்பது நாட்கள் வீட்டில் பூஜை செய்ய வேண்டும். ஒன்பதாவது நாள் கடவுளுக்கு தாலி சமர்ப்பிக்க வேண்டும் என்று, பரிகாரமும் தெரிவித்துள்ளார்.
இதன்படி எட்டு நாட்கள் பூஜைகளை முடித்தனர். நேற்று முன்தினம் கடைசி நாள் பூஜையை முடித்து கொண்டு, தாலி சமர்ப்பிக்க கோவிலுக்கு செல்ல தயாராகி வந்தனர். மதியம் உணவு முடிந்து, தன் அறைக்கு சென்ற வித்யா ஜோதி, வெளியே வரவேயில்லை. அவர் ஒர்க் பிரம் ஹோமில் இருந்ததால், பணியில் இருப்பார் என, குடும்பத்தினர் நினைத்தனர்.
இரவு 8:30 மணியளவில், கோவிலுக்கு செல்ல வேண்டி இருந்ததால், தாய் கவிதா மகளை அழைக்க சென்றார். பல முறை கதவை தட்டியும் திறக்கவில்லை. சந்தேகமடைந்த தாய், ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, மகள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பாகல்குன்டே போலீசார், உடலை மீட்டனர். தனக்கு அல்பாயுசு என, ஜோதிடர் கூறியதால் மன அழுத்தத்தில் இருந்த வித்யா ஜோதி, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது முடிவுக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
