/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை
/
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஏப் 26, 2025 08:27 AM

கோலார் : வரதட்சணை கொடுமையால் இளம்பெண் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மாமனார், மாமியார், கணவரின் பாட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோலாரின் மாலுார் கடடேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தினேஷ், 27, ரஷ்மி, 25. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தபோது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது தினேஷுக்கு, ரஷ்மி குடும்பத்தினர் நகை, பணம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
ஆனாலும் கடந்த சில மாதங்களாக தினேஷ் தந்தை அப்பாஜி, தாய் சரோஜா, இவரது தாய் ரத்னம்மா ஆகியோர், கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி ரஷ்மிக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர்.
கர்ப்பமாக இருந்த ரஷ்மிக்கு, மூன்று மாதங்களுக்கு முன்பு கருச்சிதைவு ஏற்பட்டு உள்ளது. இதை வைத்து அவரை மனரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த ரஷ்மி நேற்று முன்தினம் இரவு கணவர் வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் இருந்து கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
'என் கணவர் தினேஷ் மிகவும் நல்லவர். ஆனால் அவரது குடும்பத்தினர், எனக்கு நிறைய தொல்லை கொடுத்தனர். திருமணம் ஆனதில் இருந்து நான் சந்தோஷமாக இல்லை. அம்மா, என்னை மன்னித்து விடுங்கள். இவ்வளவு நாள் இங்கே கஷ்டங்களை தாங்கிக் கொண்டேன். இனி எல்லாம் முடியாது.
'வரதட்சணை வாங்கி வராததால் என்னை கொடுமைப்படுத்தினர். என்னை மன்னித்துவிடுங்கள்' என, ரஷ்மி கடிதத்தில் எழுதி இருந்ததாக, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
ரஷ்மியின் பெற்றோர் அளித்த புகாரில் மாலுார் போலீசார், அப்பாஜி, சரோஜா, ரத்னம்மாவை நேற்று கைது செய்தனர். தினேஷிடம் விசாரணை நடக்கிறது.