ADDED : மே 02, 2026 03:41 AM

பாகலுார்: பாலியல் உறவுக்கு ஒத்துழைக்கும்படி, விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை தந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு பாகலுாரில் வசிப்பவர் சந்திரசேகர், 25. தனியார் நிறுவன ஊழியர். இவர் வசிக்கும் பகுதியில், விமான பணிப்பெண்ணாக பணியயாற்றும், 23 வயது இளம்பெண் வசிக்கிறார்.
ஒரே பகுதியினர் என்பதால் சந்திரசேகருக்கும், இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மொபைல்போனில் அடிக்கடி பேசினர். சந்திரசேகரிடம், இளம்பெண் நட்பாக பழகினார்.
ஆனால், சந்திரசேகரின் எண்ணம் வேறு மாதிரியாக இருந்தது. இளம்பெண்ணை பாலியல் உறவுக்கு பயன்படுத்தி கொள்ள நினைத்தார். ஒரு முறை இளம்பெண்ணிடம், நீ என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று அழைத்துள்ளார்.
இதற்கு இளம்பெண் மறுத்ததுடன், சந்திரசேகருடன் பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தார்.
கோபம் அடைந்த அவர், இளம்பெண்ணை தினமும் பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துள்ளார். சாலையில் அவரை வழிமறித்ததுடன் கையை பிடித்து இழுத்தும் அநாகரிகமாக நடந்து உள்ளார். இதுபற்றி இளம்பெண் தன் பெற்றோரிடம் கூறினார்.
பாகலுார் போலீஸ் நிலையத்தில் சந்திரசேகர் மீது கடந்த, 29ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
