ADDED : செப் 06, 2025 06:48 AM
பெங்களூரு:மர்ம காய்ச்சலால் பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் இறந்தார். டாக்டர் மீது வாலிபரின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெங்களூரு, டி.தாசரஹள்ளியை சேர்ந்தவர் சிவகுமார், 30. இவருக்கு திருமணம் ஆகவில்லை; கூலித் தொழிலாளி.
கடந்த ஒரு வாரமாக இவருக்கு காய்ச்சல் இருந்தது. வீட்டின் அருகே உள்ள மருத்துவமனையில் ஊசி போட்டும் சரியாகவில்லை.
மர்ம காய்ச்சல் என்று தெரிந்ததும், சிவாஜிநகர் பவுரிங் அரசு மருத்துவமனையில் கடந்த 2ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
சிவகுமாரை பரிசோதித்த டாக்டர் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதாக கூறினார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் உடல் நிலை மோசமானது.
ஐ.சி.யு.,வில் சிகிச்சை அளிக்கும்படி, டாக்டரிடம், சிவகுமார் தாய் சாரதா கேட்டார். ஆனாலும் சாதாரண வார்டிலேயே சிவகுமார் சிகிச்சை தொடர்ந்தது.
நேற்று காலை திடீரென சிவகுமார் இறந்தார். டாக்டர் அலட்சியத்தால் மகன் இறந்ததாக சாரதா குற்றஞ்சாட்டியுள்ளார்.