ADDED : ஜூலை 16, 2026 11:56 PM
ஜெயநகர்: ஹோட்டல் ஒன்றில், மாடிக்கு செல்லும் போது, 'லிப்ட்' கதவில் தலை சிக்கியதில், இளைஞர் உயிரிழந்தார்.
தார்வாடை சேர்ந்தவர் ராஜேஷ், 22. படிப்பை முடித்த இவருக்கு, புதிதாக ஹோட்டல் தொழிலை துவக்க வேண்டும் என்ற, ஆசை இருந்தது. ஹோட்டல் தொழிலை கற்கும் நோக்கில், பெங்களூருக்கு வந்திருந்தார்.
இவரது நண்பர் அவினாஷ் என்பவர், பெங்களூரின் ஜெயநகரில், ஹோட்டல் வைத்துள்ளார். ஹோட்டல் எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக, நேற்று காலை 9:00 மணிக்கு, ராஜேஷ் அங்கு சென்றிருந்தார்.
இரண்டாவது மாடிக்கு லிப்டில் செல்லும் போது, எதிர்பாராமல் அவரது தலை லிப்ட் கதவில் சிக்கிக்கொண்டது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த ஜெயநகர் போலீசார், ராஜேஷின் உடலை மீட்டனர். ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரிக்கின்றனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை, ஆய்வு செய்கின்றனர். தற்போது ஹோட்டலுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.
