/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
வீட்டுக்கடன் 'டாப் -அப்' கடன் வசதியை எப்போது நாடலாம்?
/
வீட்டுக்கடன் 'டாப் -அப்' கடன் வசதியை எப்போது நாடலாம்?
வீட்டுக்கடன் 'டாப் -அப்' கடன் வசதியை எப்போது நாடலாம்?
வீட்டுக்கடன் 'டாப் -அப்' கடன் வசதியை எப்போது நாடலாம்?
ADDED : ஏப் 22, 2024 12:27 AM

எளிதாக கிடைக்கும் கடன் வசதி என்றாலும், வீட்டுக்கடன் மீதான டாப்- அப் கடனை அணுகுவதில் கவனமாக இருக்க வேண்டும்.
தங்க நகைக் கடன்களை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் மீதான டாப்- அப் கடன் வசதி வினியோகத்தையும் ரிசர்வ் வங்கி கண்காணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கிகள் இந்த வகை கடனை அதிகம் முன்னிறுத்தும் நிலை உண்டானால், கூடுதல் கடன் சுமையாக மாறி, மாதத் தவணை தவறுவதற்கு வழிவகுக்கலாம் என்பது ரிசர்வ் வங்கி கவலை கொண்டுள்ளது. இந்த பின்னணியில், வீட்டுக் கடன் மீதான டாப் -அப் கடன் வசதி குறித்து விரிவாக பார்க்கலாம்.
எளிய கடன்
சொந்த வீடு வாங்குவதற்கு வீட்டுக் கடன் பரவலாக நாடப்படுகிறது. கடன் தவணையை முறையாக செலுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள், வீட்டுக் கடன் மீது டாப்- அப் கடன் வசதியை அளிப்பதுண்டு. இவை கூடுதல் கடன் தொகையாக கருதப்படுகின்றன.
பொதுவாக, பெறப்பட்ட கடன் தொகைக்கும், நிலுவையில் உள்ள அசலுக்கும் இடையிலான தொகையைப் பொறுத்து இது அமைகிறது. மூலக் கடனின் வட்டி அடிப்படையில் இதற்கான வட்டி விகிதம் அமையும். ஒரு சில வங்கிகள் கூடுதலாகவும் வட்டி வசூலிக்கலாம். இதற்கான காலம், கடன் காலத்திற்கு உட்பட்டு அமையும். சில வங்கிகள், 15 ஆண்டுகள் எனும் வரம்பையும் நிர்ணயிக்கின்றன.
டாப் -அப் கடன் என்பது வீட்டுக்கடன் மீதானது என்பதால் ஈட்டுறுதி இல்லாத கடன். வாடிக்கையாளர் கடன் வரலாறுக்கு ஏற்ப வங்கிகள் தீர்மானிப்பதால் எளிதாக கிடைக்கும் வசதி.
மேலும், ஏற்கனவே ஆவணங்களை சமர்ப்பித்து கடனுக்கான செயல்முறைகளை நிறைவேற்றியுள்ளதால், டாப்- அப் கடன் பெறும் போது புதிதாக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
மேலும், இந்த கடனை தனிநபர் கடன் போல கருதலாம். இந்த தொகையை குறிப்பிட்ட நோக்கத்திற்காக தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாடிக்கையாளர் விரும்பிய வழியில் பயன்படுத்தலாம்.
எச்சரிக்கை தேவை
எளிதாக கிடைக்கும் கடன் என்பதால், இந்த வசதி பலவித அனுகூலங்களை கொண்டது. வீடு பராமரிப்பு அல்லது மேம்பாட்டிற்கு இந்த தொகையை பயன்படுத்தலாம் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தலாம். வீடு பராமரிப்பிற்கு பயன்படுத்தினால், அந்த தொகைக்கு வருமான வரி சலுகையும் கோர முடியும்.
எனினும், இந்த வசதியை பயன்படுத்துவதில் கவனம் தேவை. எளிதாக கிடைக்கிறது என்பதற்காக, கடன் பெற்று வாழ்வியல் சார்ந்த செலவுகளில் ஈடுபடுவது கடன் சுமையை உண்டாக்கலாம் என எச்சரிக்கின்றனர். இந்த கடனை வீடு பராமரிப்பு அல்லது மேம்பாட்டிற்கு பயன்படுத்துவது ஏற்றது.
அவசர தேவை காலத்தில், தனிநபர் கடன் போன்றவற்றை விட சாதகமானது எனத் தெரிந்தால் இந்த கடனை நாடலாம். ஆனால், கடன் தொகையை திரும்பச் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
தனிநபர் கடனோடு ஒப்பிடும் போது, இந்த கடனை திரும்பச் செலுத்த அதிக காலமாகும் என்பதால், வட்டி குறைவு என்றாலும், ஆண்டு கணக்கில் மொத்தமாக செலுத்தும் வட்டி அதிகமாக இருக்கும். எனவே, இந்த கடனை முன்கூட்டியே அடைக்க முயல்வது நல்லது. கடன் பெறுபவர் நிதி சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

