ரூ.10,000 கோடி ஜி.எஸ்.டி., பாக்கி: 10 விமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
ரூ.10,000 கோடி ஜி.எஸ்.டி., பாக்கி: 10 விமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
ADDED : ஆக 07, 2024 01:44 AM

புதுடில்லி:இந்தியாவில் விமான சேவைகளை வழங்கி வரும் 'பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுாப்தான்ஸா, எமிரேட்ஸ்' உள்ளிட்ட பத்து வெளிநாட்டு நிறுவனங்கள், மொத்தம் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு, ஜி.எஸ்.டி., செலுத்தவில்லை என, மத்திய ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
வெளிநாடுகளைச் சேர்ந்த பத்து விமான சேவை நிறுவனங்கள், அவற்றின் தலைமை அலுவலகங்களில் இருந்து, இந்திய கிளை அலுவலகங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சேவைகளுக்கு ஜி.எஸ்.டி., செலுத்தாமல், நிலுவை வைத்திருப்பதாக, கடந்த மூன்று நாட்களாக தனித்தனியே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இது கடந்த 2017 முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கான நிலுவைத் தொகையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூன் 26ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, தொடர்புடைய நபரிடம் இருந்து இறக்குமதி சேவையைப் பெறுபவர், முழு உள்ளீட்டு வரி பயனுக்கான கிரெடிட் பெற தகுதியுடையவர் என்பது, விமான சேவை நிறுவனங்களுக்கு பொருந்தாது.
விமான சேவை நிறுவனங்கள், விலக்கு மற்றும் விலக்கு அளிக்கப்படாத பிரிவுகள் என இரண்டு பிரிவுகளில் சேவைகளை வழங்குவதால், மேற்கண்ட சுற்றறிக்கையின் கீழ், அவை சலுகை பெறத் தகுதியற்றவை.
விலக்கு அளிக்கப்பட்ட சேவை, விலக்கு அளிக்கப்படாத சேவைகள் குறித்த தனிப்பட்டியலை அளிக்குமாறு, ஏற்கனவே விமான சேவை நிறுவனங்களிடம் விபரம் கேட்கப்பட்டன. ஆனால், பத்தில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே, இந்த பட்டியலை அளித்துள்ளன.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.