ADDED : ஆக 06, 2024 07:37 AM

புதுடில்லி : இந்தியா - இலங்கை இடையேயான தாராள வர்த்தக ஒப்பந்தத்தில், கூடுதல் வரி சலுகைகள் குறித்த பேச்சு சமீபத்தில் கொழும்புவில் நடைபெற்றது.
இந்தியா மற்றும் இலங்கை இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், கடந்த 2000ம் ஆண்டு மார்ச் மாதம் நடைமுறைக்கு வந்தது. இரு நாடுகளும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த, பலதரப்பட்ட பொருட்கள் மீதான வரிகளை குறைத்தன.
இதைத் தொடர்ந்து, தற்போது இந்த ஒப்பந்தத்தில் கூடுதல் வரி சலுகைகள் குறித்து, இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றன.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போதைய தாராள வர்த்தக ஒப்பந்தம், பொருட்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. இதையடுத்து, இந்த ஒப்பந்தத்தை சேவைகள், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை அடங்கிய, ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தமாக விரிவுபடுத்த, இரு நாடுகளும் பல சுற்று பேச்சு நடத்தி வருகின்றன.
தற்போது நடந்த பேச்சில், கார்கள், வர்த்தக வாகனங்கள், இயந்திரங்கள் மீதான சுங்க வரி சலுகையை இந்தியா முன் வைத்தது.
மறுபுறம், இந்தியாவுக்கான ஆடை ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டை நீக்குமாறும்; தேயிலை மற்றும் சில வேளாண் பொருட்களுக்கான வரி சலுகைகளை வழங்குமாறும் இலங்கை கோரியது. விசா நடைமுறைகளை எளிதாக்குமாறு இலங்கையை, இந்தியா கேட்டுக் கொண்டது.
இலங்கை அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தலுக்கு பின் அடுத்தகட்ட பேச்சை தொடருவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.