ADDED : ஏப் 09, 2024 06:32 AM

புதுடில்லி : இந்தியாவில் வாகனங்களுக்கான சில்லரை விற்பனை, கடந்த 2024ம் நிதியாண்டில், 10 சதவீதம் அளவுக்கு உயர்ந்ததாக, 'படா' எனும் வாகன முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வாகன சில்லரை விற்பனை, கடந்த 2023ம் நிதியாண்டில் 2.22 கோடி வாகனங்களாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில், 10 சதவீதம் அதிகரித்து, 2.45 கோடி வாகனங்களாக உள்ளது.
இதேபோல், கடந்த மார்ச் மாதத்துக்கான விற்பனையும், முந்தைய ஆண்டை விட, 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
பயணியர் வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் டிராக்டர் ஆகியவற்றின் விற்பனை, கடந்த நிதியாண்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பொருளாதார வளர்ச்சி, சாதகமான அரசு கொள்கைகள் மற்றும் நல்ல பருவமழை எதிர்பார்ப்பு ஆகியவை, கிராமப்புறங்கள் மற்றும் வர்த்தக வாகன துறையில், தேவையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாகனங்களின் அறிமுகம், குறிப்பாக மின்சார வாகனங்கள் குறித்த உற்சாகம், துறையை முன்னோக்கி நகர்த்தும் வகையில் உள்ளது.
மனிஷ் ராஜ் சிங்கானியா
தலைவர், படா

