'ஸ்பெயினில் அதிக ஆர்டர்களை பெற பார்சிலோனா ஜவுளி கண்காட்சி உதவும்'
'ஸ்பெயினில் அதிக ஆர்டர்களை பெற பார்சிலோனா ஜவுளி கண்காட்சி உதவும்'
ADDED : மார் 06, 2025 11:21 PM

திருப்பூர்:வங்கதேசத்துக்கு செல்லும் ஆர்டர்களை கவர்ந்திழுக்க, 'பார்சிலோனா டெக்ஸ்டைல்' கண்காட்சி கைகொடுக்குமென, ஏ.இ.பி.சி., நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் முக்கிய தொழில் நகரமாகிய பார்சிலோனாவில், சர்வதேச ஜவுளி கண்காட்சி, வரும் ஜூன் 2ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
முன்னேற்றம்
இந்தியாவுடன், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள ஐரோப்பிய யூனியனில் இருக்கும் ஸ்பெயினில் நடக்கும் கண்காட்சி, இந்திய ஜவுளித் துறையினருக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்குமென நம்பிக்கை பிறந்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு நிலவரப்படி, உலக நாடுகளில் இருந்து, 1.71 லட்சம் கோடி ரூபாய்க்கு, அந்நாடு ஆயத்த ஆடை இறக்குமதி செய்துள்ளது. ஸ்பெயினுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் நாடுகளில், இந்தியா ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.
சீனா முதலிடத்திலும், சிறிய வித்யாசத்துடன் வங்கதேசம் இரண்டாமிடத்திலும் உள்ளன. துருக்கி மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
இந்தியா - ஸ்பெயின் இடையேயான வர்த்தகம், கடந்த சில ஆண்டுகளாக முன்னேற்றம் அடைந்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டில், இந்திய ஏற்றுமதி 6,100 கோடி ரூபாயை கடந்துவிட்டதாக, தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாய்ப்பு
ஏ.இ.பி.சி., எனும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அதிகாரிகள் கூறுகையில், “வங்கதேசத்தில் நிலவிய குழப்பத்தால், அந்நாட்டுடன் வர்த்தக தொடர்பில் இருந்த ஐரோப்பிய நிறுவனங்கள், இந்தியாவின் பக்கமாக திரும்பியுள்ளன.
“கடந்த எட்டு மாதங்களாக வர்த்தக விசாரணை அதிகரித்துள்ளது. ஸ்பெயினுக்கான ஏற்றுமதி வாய்ப்பு நிச்சயம் அதிகரிக்கும். இந்நிலையில், வரும் ஜூன் மாதம் நடக்கும் சர்வதேச ஜவுளி கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக, புதிய ஆர்டர்களை கைப்பற்றலாம்,” என்றனர்.
வங்கதேசத்தில் நிலவும் குழப்பத்தால், ஐரோப்பிய நிறுவனங்கள் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. ஸ்பெயினுக்கான ஏற்றுமதி வாய்ப்பு நிச்சயம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது