இயந்திரங்கள் வாங்க மானியம் நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை
இயந்திரங்கள் வாங்க மானியம் நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை
ADDED : ஏப் 28, 2024 12:38 AM

சென்னை:புதிய மற்றும் விரிவாக்கத்திற்கு இயந்திரங்கள் வாங்க, 15 சதவீதம் மானியத்தை மீண்டும் வழங்குமாறு மத்திய அரசுக்கு, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து, தமிழக தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறியதாவது:
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வாயிலாக, அதிகம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்த பிரிவில் புதிதாக துவங்கப்படும் தொழில் நிறுவனங்களும், ஏற்கனவே செயல்படும் நிறுவனங்களும், 5 கோடி ரூபாய் வரை இயந்திரங்கள் வாங்குவதற்கு, 15 சதவீதம் மானியத்தை மத்திய அரசு வழங்கி வந்தது.
இந்த மானியம், வங்கிகளில் கடன் வாங்கும் போது, அதில் நேரடியாக வரவு வைக்கப்படும். இல்லையெனில் கடனை செலுத்தியதும், மானிய தொகை வட்டியுடன் சேர்த்து வழங்கப்படும்.
இது, குறைந்த முதலீட்டில் செயல்படும் நிறுவனங்களின் விரிவாக்க திட்டங்களுக்கு பெரிய உதவியாக இருந்தது.
கடந்த, 2022ல் மானியம் வழங்குவதை, மத்திய அரசு நிறுத்தியது. பலமுறை வலியுறுத்தியும், மானியம் வழங்கப்படவில்லை.
ஏற்கனவே, மூலப்பொருள்கள் விலை உயர்வு, மின் கட்டணம் அதிகரிப்பு போன்றவற்றால் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, இயந்திரங்கள் வாங்க, 15 சதவீத மானியத்தை மீண்டும் வழங்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
15 சதவீத மானியம்
5 கோடி ரூபாய் வரை இயந்திரங்கள் வாங்கலாம்
2022ல் மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டது

