நிறுவனங்களின் சமூக பொறுப்பு செலவுகள் லாபம் உயர்ந்ததை அடுத்து அதிகரிப்பு
நிறுவனங்களின் சமூக பொறுப்பு செலவுகள் லாபம் உயர்ந்ததை அடுத்து அதிகரிப்பு
ADDED : மே 10, 2024 04:04 AM

புதுடில்லி : தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின், சமூக பொறுப்பு செலவு, கடந்த 2023ம் நிதியாண்டில், 5 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 15,000 கோடி ரூபாயாக இருந்ததாக, 'பிரைம் டேட்டாபேஸ் குழுமம்' தெரிவித்துள்ளது.
சி.எஸ்.ஆர்., எனப்படும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு சட்டத்தின்படி, 500 கோடி ரூபாய் மதிப்பு அல்லது 1,000 கோடி ரூபாய் வருவாய் மற்றும் 5 கோடி ரூபாய் நிகர லாபம் கொண்ட நிறுவனங்கள், தங்கள் கடந்த மூன்று ஆண்டு சராசரி நிகர லாபத்தில், 2 சதவீதத்தை, சமூக பொறுப்பு திட்டங்களுக்காக பயன்படுத்த வேண்டும்.
தொண்டுக்கு நன்கொடை அளிப்பது, சமூகத்தில் தன்னார்வ தொண்டுகளை மேற்கொள்வது, சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பது அல்லது கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு உதவுவது போன்றவை, இதில் அடங்கும்.
தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின், சி.எஸ்.ஆர்., செலவுகள், கடந்த 2022ம் நிதியாண்டில், 14,816 கோடி ரூபாயாக இருந்தது.
இது 2023ம் நிதியாண்டில், 5 சதவீதம் அதிகரித்து, 15,524 கோடி ரூபாயாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்நிறுவனங்களின் சராசரி 3 ஆண்டு நிகர லாபமும், கடந்த 10 ஆண்டுகளில், 13 சதவீதம் உயர்ந்துள்ளது.
நிறுவனங்களின் லாப அதிகரிப்பால், சி.எஸ்.ஆர்., செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், நிறுவனங்கள் தாங்கள் செலவு செய்ய வேண்டியதை விட அதிகம் செலவிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, சி.எஸ்.ஆர்., செலவுகளில் இருந்து சிறிய நிறுவனங்களுக்கு, விலக்கு அளிக்கும் வகையில், சி.எஸ்.ஆர்., சட்டத்தில், அரசு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பபட்டுள்ளது.