அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கருமிளகை நீக்க கோரிக்கை
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கருமிளகை நீக்க கோரிக்கை
ADDED : ஆக 10, 2024 12:46 AM

புதுடில்லி:இந்தியாவில், கருமிளகின் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை விலைகளுக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுகிறது.
இதனையடுத்து, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சகம், ஆக.1 முதல் கருமிளகை, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ், விலை கண்காணிப்பு அமைப்பில் கொண்டு வந்துள்ளது.
தினசரி விலை கண்காணிப்பின் கீழ் உணவுப் பொருட்களை கொண்டு வருவதன் வாயிலாக, அப்பொருட்களின் விலை ஏற்ற, இறக்கத்தை நிலையாக வைத்திருப்பதுடன், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் கொள்கை முடிவெடுப்பதில் அது முக்கிய பங்கு வகிக்கும் என மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கருமிளகும் சேர்க்கப்பட்டுள்ளதால், அதன் கையிருப்பு, ஏற்றுமதி தொடர்பாக மத்திய அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, அனைத்திந்திய நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியாளர் அமைப்பின் தலைவர் இம்மானுவேல் நம்பூசெரில் தெரிவித்துள்ளதாவது:
மிளகு எப்படி அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது என்பது ஆச்சரியமளிக்கிறது. ஏனெனில், சமையலில் மிளகு மிகவும் குறைந்தளவே பயன்படுத்தப்படுகிறது.
விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்பதால், கருமிளகுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் அதைச் சேர்ப்பது சரியான முடிவு அல்ல.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

