ADDED : ஜூலை 09, 2024 06:59 AM

சென்னை: துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும்; சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானிலும், விமான பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்த, 'டிட்கோ' முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு, நாடு முழுதும் விமான சேவைகளை விரிவாக்கம் செய்ய, 'உதான்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, மக்களின் தேவைக்கு ஏற்ப விமான சேவை வழங்கி, நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும், முக்கிய நகரங்களில் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கு ஏற்ப, நம் நாட்டில் விமானத்தை இயக்க, பயிற்சி பெற்ற விமானிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்த பயிற்சியை அளிக்கும் நிறுவனங்கள் வெகு குறைவாகவே உள்ளன. இதனால், பலரும் விமான பயிற்சி பெற ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து நாடுகளுக்கு செல்கின்றனர். எனவே, தமிழகத்தில் விமான பயிற்சி நிறுவனங்களை உருவாக்க, டிட்கோ திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த இரு இடங்களிலும் உள்ள வான்வெளி, காற்றின் வேகம் ஆகியவை, விமான பயிற்சி நிறுவனம் துவக்குவதற்கு தேவையான, சரியான இயற்கை சூழலில் உள்ளது. கோவில்பட்டியில் முதல் பயிற்சி நிறுவனம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் தயாராக உள்ளது. இதன் வாயிலாக, அதிக எண்ணிக்கையில் விமான பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.