'சீனாவை தவிர்த்து அமெரிக்க பொருளை தொழில் துறையினர் தேர்வு செய்யலாம்' போட்டி வரி விதிப்பை சமாளிக்க அரசு ஆலோசனை
'சீனாவை தவிர்த்து அமெரிக்க பொருளை தொழில் துறையினர் தேர்வு செய்யலாம்' போட்டி வரி விதிப்பை சமாளிக்க அரசு ஆலோசனை
ADDED : மார் 14, 2025 11:33 PM

புதுடில்லி:மூலப்பொருட்கள் இறக்குமதியில், சீனாவுக்கு பதிலாக எந்தெந்த அமெரிக்கப் பொருட்களை தேர்வு செய்யலாம் என அடையாளம் காணுமாறு, தொழில் துறையினரிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் பரஸ்பர வரி வரும் ஏப்., 2 முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டின் அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டு, மத்திய அரசு பல்வேறு தொழில் துறையினரிடம் ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் வெளியிட்ட அறிக்கையில், 'இந்திய ஏற்றுமதியாளர்களின் நலனை பாதுகாக்கும் அதே வேளையில், சிறந்த பலன்களை உறுதி செய்ய பல்வேறு உத்திகளை பின்பற்றி வருகிறது.
'ஏற்றுமதியாளர்கள் பாதுகாப்பான மனப்பான்மையில் இருந்து வெளியே வருவதோடு, தைரியமாக இருக்க வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார்.
இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பால் உருவாகும் வாய்ப்புகள், தாக்கங்கள் குறித்து பேசப்பட்டது. டிரம்பின் சமீபத்திய 25 சதவீத வரி விதிப்பால், 43,500 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் பாதிப்பை சந்தித்து உள்ளதாக ஸ்டீல் மற்றும் அலுமினியம் ஏற்றுமதியாளர்கள் முறையிட்டனர்.
மேலும், அமெரிக்காவில் ஜவுளி, நவரத்தினங்கள், தங்க நகை, கார்பெட் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் உள்ள சந்தை வாய்ப்புகள் குறித்து ஏற்றுமதியாளர்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
குறிப்பாக, ஜவுளி துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள், அமெரிக்கப் பொருட்களுக்கு வரியில்லா சலுகை வழங்கலாமென தெரிவித்தனர்.
மேலும், பல ஏற்றுமதியாளர்கள், அமெரிக்காவுக்கு பொருட்கள் ஏற்றுமதியில் முக்கிய நாடுகளான சீனா, மெக்சிகோ மற்றும் கனடா வரி விதிப்பை எதிர்கொள்வதால், இந்தியாவுக்கு அதிகளவில் ஆர்டர்கள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
விவசாயம் தவிர்த்து சில துறைகளில், அமெரிக்காவை விட குறைவான விலையில் பொருட்களை உற்பத்தி செய்வதால், வரி விதிப்பானது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.