பசுமை அம்மோனியா ஏற்றுமதி; இந்தியா - ஜப்பான் ஒப்பந்தம்
பசுமை அம்மோனியா ஏற்றுமதி; இந்தியா - ஜப்பான் ஒப்பந்தம்
ADDED : ஆக 22, 2024 01:40 AM

புதுடில்லி: பசுமை அம்மோனியா ஏற்றுமதி தொடர்பாக, இந்தியா, ஜப்பான் இடையே நேற்று முன்தினம் புதிய ஒப்பந்தம் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில், செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ், சோஜிட்ஸ் கார்ப்பரேஷன், குயுஷு எலக்ட்ரிக் பவர் மற்றும் என்.ஒய்.கே. லைன் ஆகிய நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு பசுமை அம்மோனியாவை ஏற்றுமதி செய்ய உள்ளன.
'இந்த ஒப்பந்தம், பசுமை எரிசக்தி சந்தையில் இந்தியாவின் முக்கிய பங்கை வலுப்படுத்தியுள்ளது. மேலும், பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளில், மத்திய அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இது உலகளாவிய பசுமை எரிசக்தி நிலப்பரப்பில், இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை காட்டுவதாக உள்ளது', என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு பசுமை அம்மோனியா வினியோகம் செய்வதற்கு முதல்முறையாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, இந்தியாவில் உற்பத்தியாகும் பசுமை அம்மோனியோ, ஜப்பானில் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஆண்டுக்கு 7.5 லட்சம் டன்கள், பசுமை அம்மோனியா ஏற்றுமதி செய்ய டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், 4.5 லட்சம் டன்கள் ஏற்றுமதி செய்ய, கூடுதல் டெண்டர்கள் வெளியிடப்பட உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.