ADDED : மே 03, 2024 09:50 PM

புதுடில்லி:ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் சமீபத்தில் மேற்கொண்ட மாற்றங்களைத் தொடர்ந்து, உடல் நல காப்பீடு திட்டங்களுக்கான பிரீமியம் தொகை உயர உள்ளது. குறிப்பாக, பெருமளவு பயன்படுத்தப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கான பிரீமியம் தொகை, 15 சதவீதம் வரை உயர உள்ளது.
சமீபத்தில் காப்பீடுத் திட்டங்களுக்கான காத்திருப்பு காலத்தை, 4 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக ஐ.ஆர்.டி.ஏ.ஐ., குறைத்தது. மேலும், மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கான 65 வயது உச்ச வரம்பையும் நீக்கி, உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, ஆணையத்தின் மாற்றங்கள் மற்றும் தங்களது காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான செலவுகளைக் கருத்தில் கொண்டு, பிரீமியம் தொகையை உயர்த்த உள்ளதாக, பல்வேறு நிறுவனங்களும் அறிவித்து வருகின்றன.
'எச்.டி.எப்.சி., எர்கோ' நிறுவனம், சராசரியாக 7.50 முதல் 12.50 சதவீதம் வரை பிரீமியம் தொகையை உயர்த்த உள்ளதாக, அதன் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிஉள்ளது.
மேலும் இது, வயது மற்றும் இடம் வாரியாக வேறுபடும் என்றும் தெரிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்றாலும், கட்டணங்கள் நிச்சயம் மாற்றியமைக்கட வேண்டிய சூழல் எழுந்ததாலேயே, உயர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
மற்றொரு காப்பீட்டு நிறுவனமான 'ஆக்கோ ஜெனரல் இன்சூரன்ஸ்' நிறுவனம், பிரீமியம் தொகையை, 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.