ADDED : மே 03, 2024 01:56 AM

புதுடில்லி: ஸ்மார்ட்போன்களை வாங்க ஆன்லைன் வர்த்தக தளங்களையே அதிகம் பயன்படுத்தி வந்த மக்கள், இப்போது மீண்டும் கடைகளை நோக்கி தங்கள் பார்வையை திருப்பி உள்ளனர். கடந்த மார்ச் காலாண்டில், சில்லரை விற்பனை கடைகளில், ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்திருப்பதாக 'கவுன்டர் பாயின்ட்' ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் காலாண்டில், சில்லரை விற்பனையகங்களில், விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் விகிதம், 56 சதவீதமாக இருந்தது. இது கடந்த மார்ச் காலாண்டில், 61 சதவீதமாக உயர்ந்துள்ளது. மீதமுள்ள 39 சதவீத விற்பனையில், 'அமேசான்' மற்றும் 'பிளிப்கார்ட்' ஆகிய மின்னணு வர்த்தக தளங்கள், பெரும்பான்மையான பங்கு வகிக்கின்றன.
'சாம்சங்' மற்றும் 'விவோ' நிறுவனங்கள், நாட்டில் அதிகப்படியான சில்லரை விற்பனையகங்களை கொண்டுள்ளன. ஆன்லைனில் மட்டும் அதிகம் விற்கப்படும் 'போகோ, ஒன்பிளஸ், ரியல்மி' போன்ற பிராண்டுகளும், கடந்த காலாண்டில், தங்கள் நேரடி விற்பனையை விரிவுபடுத்தி உள்ளன.
வாடிக்கையாளர்கள், பிரீமியம் வகை போன்களை வாங்குவதற்கு முன், அதை தொட்டு, உணர விரும்புகின்றனர். இதன் காரணமாகவே, சில்லரை விற்பனையகங்களில் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், வட்டியில்லா மாதாந்திர தவணை, விலை பேரம் பேசுவதற்கான வாய்ப்பு போன்ற காரணங்களும், விற்பனைக்கு உதவுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கவுன்டர் பாயின்ட் ரிசர்ச் நிறுவனத்தின், மூத்த ஆய்வாளர் ஷில்பி ஜெயின் தெரிவித்துள்ளதாவது:
கடந்த சில காலாண்டுகளாக, சில்லரை விற்பனையகங்களே, ஸ்மார்ட்போன் விற்பனைக்கான முக்கிய இடங்களாக உள்ளன. பொதுவாக மின்னணு வர்த்தக தளங்களில், ஆண்டின் இரண்டாம் பாதி அதாவது, பண்டிகை காலத்தின் போது தான், விற்பனை அதிகரிக்கிறது.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
ஸ்மார்ட்போன் விற்பனை
காலாண்டு சில்லரை விற்பனையகங்கள்
அதிக விற்பனையகங்கள் கொண்ட நிறுவனங்கள்
முக்கிய கவனம்
சாதகம்
பாதகம்