மஹா., - ம .பி.,யில் அதிக மகசூல் மக்காச்சோளம் பயிரிட ஆர்வம் காரீப் பருவத்தில் சாகுபடி பரப்பு 5.31% உயர்வு
மஹா., - ம .பி.,யில் அதிக மகசூல் மக்காச்சோளம் பயிரிட ஆர்வம் காரீப் பருவத்தில் சாகுபடி பரப்பு 5.31% உயர்வு
ADDED : செப் 15, 2024 12:14 AM

புதுடில்லி:பெட்ரோலில் எத்தனால் கலப்பு காரணமாக, அதன் தேவை அதிகரித்து வருவதால், அதற்கு பயன்படும் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.
எத்தனால் தயாரிப்பில் கரும்பு மட்டுமின்றி; அரிசி, சோளம், தினை உள்ளிட்ட தானியங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, நடப்பு காரீப் பருவத்தில், கடந்த 6ம் தேதி நிலவரப்படி, 87.26 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சோளத்தை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இது, கடந்தாண்டின் இதே காலத்தைவிட 5.31 சதவீதம் அதிகமாகும்.
மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், சோளம் பயிரிடும் பரப்பளவு கணிசமாக அதிகரித்துள்ளது. கர்நாடகா, ராஜஸ்தான், உ.பி., மாநிலங்களில் சிறிதளவு உயர்ந்துள்ளது. தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் சோளம் சாகுபடி பரப்பு சற்றே குறைந்துள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததாவது:
தென்மேற்கு பருவமழை நிலவரம் நன்றாக உள்ளதால், கடந்தாண்டைக் காட்டிலும் தற்போது சோள விதைப்பு சிறப்பாக இருக்கக் கூடும்.
ஒரு குவின்டாலுக்கு அரசு நிர்ணயித்துள்ள 2,225 ரூபாய் என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட, சந்தையில் 2,400 முதல் 2,500 ரூபாய் என அதிக விலை கிடைப்பதால், சோளம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும், மூன்று பருவங்களிலும் விளையும் பயிர் என்பதால், எத்தனால் உற்பத்திக்கு சோளம் அதிகளவு கிடைக்கிறது. பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலக்கும் இலக்கை எட்டுவதற்கு, வரும் காலங்களில் சோளத்தின் தேவை மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு தெரிவித்தனர்.