ஏஸ், ஜே.சி.பி., நிறுவனங்களுடன் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்
ஏஸ், ஜே.சி.பி., நிறுவனங்களுடன் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்
ADDED : பிப் 21, 2025 11:43 PM

புதுடில்லி:ராணுவ முப்படை பயன்பாட்டுக்காக, 1,868 'போர்க் லிப்ட்' வாகனங்களை கொள்முதல் செய்ய, 'ஏஸ், ஜே.சி.பி.,' நிறுவனங்களுடன், 697.35 கோடி ரூபாய்க்கு ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
கரடுமுரடான நிலப்பரப்புகளில் இயங்கும் இந்த போர்க் லிப்ட் வாகனங்கள், ராணுவ தளவாடங்கள் மற்றும் இதர சரக்கு பொருட்களை கையாள பயன்படுகின்றன.
கொள்முதல் செய்யப்படும் போர்க் லிப்ட் வாகனங்களில் 60 சதவீதம் ஏஸ் நிறுவனமும்; மீதம் உள்ள 40 சதவீதம் ஜே.சி.பி., நிறுவனமும் வழங்குகின்றன. 1,121 வாகனங்களை வழங்க, 420 கோடி ரூபாய்க்கு ஏஸ் நிறுவனம் ஆர்டர் பெற்றுள்ளது.
இது, அந்நிறுவன வரலாற்றில் கிடைத்த அதிகபட்ச ஆர்டர். ஜே.சி.பி., நிறுவனம், 747 போர்க் லிப்ட் வாகனங்களை வழங்க, 277.35 கோடி ரூபாய்க்கு ஆர்டர் பெற்று உள்ளது.இந்த ஒப்பந்தம், ராணுவ செயலர் ஆர்.கே.சிங் மற்றும் இரு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. ராணுவ கொள்முதல் நடைமுறையின் கீழ், 'பை இந்தியன்' என்ற பிரிவின் கீழ் இந்த கொள்முதல் இடம் பெற்றுள்ளதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துஉள்ளது.
அதாவது, உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க, ராணுவத்துக்காக உற்பத்தி செய்யப்படும் உபகரணங்களில், குறைந்தபட்சம் 50 சதவீதம் அளவுக்கு இந்திய பொருட்களை பயன்படுத்துவதே, அதன் முக்கிய நோக்கமாகும்.

