'வெளிநாடுவாழ் தமிழர்கள் கூடுதலாக தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும்'
'வெளிநாடுவாழ் தமிழர்கள் கூடுதலாக தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும்'
ADDED : ஜன 10, 2025 01:46 AM

சென்னை:“வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், தமிழகத்தில் இன்னும் அதிகமாக தொழில் முதலீடுகள் செய்ய முன்வர வேண்டும்,” என, தொழில்துறை அமைச்சர் ராஜா கூறினார்.
'தி ரிச் குளோபல் அமைப்பு' சார்பில், 'கோ குளோபல் தமிழா' என்ற தலைப்பில், மூன்று நாள் மாநாடு, சென்னையில் துவங்கியது.
இதில், தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:
தமிழர்களின் தனித்துவமிக்க பெருமையை வெளியே பேச தயங்குவதால், அதிக வளர்ச்சி அடைய வேண்டிய தமிழகம், சற்று குறைந்ததாக கருதுகிறேன். இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில், தமிழகம் முன்னணியில் உள்ளது.
இது, நுாற்றாண்டு கால போராட்டம், உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
தமிழகத்தில், 40,000 தொழில் நிறுவனங்கள் உள்ளன. தொழில் துவங்குவது, உற்பத்தி, வேலை வழங்குவது, வருவாய் போன்றவற்றில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், தோல், துணி போன்ற பொருட்கள் உற்பத்தி அதிகரித்துஉள்ளது.
பல மாநிலங்களில் தொழிற்சாலைகள் இருந்தாலும், உற்பத்தி பொருட்களின் தரத்திலும், தமிழகம் முன்னணியில் உள்ளது. வெளிநாட்டில் இருந்து வருவோர் தொழில் துவங்கவும், வேலை செய்யவும் பாதுகாப்பான மாநிலமாக, தமிழகத்தை தேர்வு செய்கின்றனர். பெண்கள் பயம் இல்லாமல் வெளியே செல்ல முடியும் என வெளிநாட்டவர்கள் கூறுவது, தமிழகத்திற்கு பெருமை.
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள், தமிழகத்தில் தொழில் முதலீடு செய்கின்றனர். அவர்கள் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.