ஆகஸ்ட் மாதத்தில் ஆறுதல் தந்த சில்லரை விலை பணவீக்கம்
ஆகஸ்ட் மாதத்தில் ஆறுதல் தந்த சில்லரை விலை பணவீக்கம்
ADDED : செப் 13, 2024 01:46 AM

புதுடில்லி: நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 3.65 சதவீதமாக மிகச் சற்றே அதிகரித்துள்ளது. எனினும், ஜூலை மாதத்துக்கு பின், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே குறைவாகும்.
பணவீக்கம், கடந்த ஜூலையில் 3.54 சதவீதமாகவும்; கடந்தாண்டு ஆகஸ்டில் 6.83 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு பணவீக்கம்
நகர்ப்புறங்களைக் காட்டிலும் ஊரகப் பகுதிகளில் பணவீக்கம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக, ரிசர்வ் வங்கியின் 4 சதவீத இலக்குக்குள் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் பிரிவில் கடந்த ஜூலையில் 5.42 சதவீதமாக இருந்த பணவீக்கம்; ஆகஸ்டில் 5.66 சதவீதமாக சற்றே அதிகரித்தது.
நடப்பு நிதியாண்டில் பணவீக்கம், 4.50 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
உற்பத்தி வளர்ச்சி சரிவு
நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலை மாதத்தில் 4.80 சதவீதமாக சரிந்துள்ளது. இது, கடந்தாண்டு ஜூலையில் 6.20 சதவீதமாக இருந்தது. தயாரிப்பு மற்றும் சுரங்கத் துறையின் சுமாரான செயல்பாடுகளே வளர்ச்சி குறைய முக்கிய காரணமாக அமைந்தன.
இதற்கிடையே, ஜூன் மாதத்துக்கான வளர்ச்சிப் புள்ளிகள் முன்பிருந்த 4.20 சதவீதத்திலிருந்து, தற்போது 4.70 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கத்துறை வளர்ச்சி கடந்த ஜூலையில் 10.70 சதவீதமாக இருந்து, நடப்பு ஜூலையில் 3.70 சதவீதமாகவும்; தயாரிப்பு துறை வளர்ச்சி 5.30 சதவீதத்திலிருந்து 4.60 சதவீதமாகவும் சரிந்துள்ளது.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 5.20 சதவீதமாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 5.10 சதவீதமாக இருந்தது.