ADDED : ஜூலை 19, 2024 12:02 AM

சென்னை:நடப்பு நிதியாண்டில் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன உதிரிபாகங்கள் உற்பத்திக்கு 225 கோடி ரூபாயை முதலீடு செய்யவிருப்பதாக, 'வீல்ஸ் இந்தியா' தெரிவித்துள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்ட வீல்ஸ் இந்தியா நிறுவனம், அலுமினிய சக்கரம், ஹைட்ராலிக் சிலிண்டர் போன்ற கனரக வாகன உதிரிபாகங்கள் மற்றும் காற்றாலைக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம் கூறியதாவது:-
இந்தாண்டிலிருந்து மாதம் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் அலுமினிய சக்கரங்களின் எண்ணிக்கையை, 25,000 என்பதில் இருந்து 40,000 ஆக அதிகரித்துள்ளோம்.
கடந்தாண்டு, கட்டுமானத்துறை சார்ந்த வாகனங்களுக்கு சக்கரங்கள் வினியோகித்ததில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளோம். கடந்த நிதியாண்டில் எங்கள் நிறுவனத்தின் ஏற்றுமதி வணிகம் 24.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
சர்வதேச அளவில் எங்களை நிலைநிறுத்த அமெரிக்கா, ஐரோப்பாவில் துணை நிறுவனங்களை துவங்கியுள்ளோம். நடப்பாண்டில், இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வினியோகித்து, நிலையான வளர்ச்சியை அடைய தீர்மானித்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.