சந்தையில் 'இன்சைடர் டிரேடிங்' 'நெஸ்லே'க்கு செபி எச்சரிக்கை
சந்தையில் 'இன்சைடர் டிரேடிங்' 'நெஸ்லே'க்கு செபி எச்சரிக்கை
ADDED : மார் 07, 2025 11:57 PM

மும்பை:பங்கு வர்த்தகத்தில் இன்சைடர் டிரேடிங் எனப்படும் கம்பெனியின் உள்விவகாரத்தை முன்கூட்டி அறிந்து அதற்கேற்ப பங்கு வணிகத்தில் ஈடுபடும் புகார் வந்திருப்பதாக, பிரபல நிறுவனமான நெஸ்லே இந்தியாவை செபி எச்சரித்துள்ளது.
நிறுவனத்தின் நியமிக்கப்பட்ட ஒரு நபர் வாயிலாக இந்த முறைகேடான பங்கு வணிகம் நடத்தி, பங்கு வர்த்தக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக, 'செபி' குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, நெஸ்லே இந்தியா நிறுவன விதிமுறை கண்காணிப்பு அதிகாரிக்கு நிர்வாக ரீதியான செபியின் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எனினும், கடிதத்தில் இடம்பெற்றுள்ள விபரம் குறித்து நெஸ்லே இந்தியா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
சுவிட்சர்லாந்து நிறுவனமான நெஸ்லேவின் இந்திய பிரிவாக நெஸ்லே இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேகி நுாடுல்ஸ் உட்பட உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.