ADDED : ஆக 12, 2024 03:51 AM

சென்னை: தமிழக, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி, முதலீடு, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் வழங்குகிறது.
தற்போது தமிழகத்தில், 9,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மத்திய அரசிடம் பதிவு செய்துள்ளன. இவை, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க, அவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, தொழில் துறையில் அனுபவம் குறைவு; எனவே, அந்நிறுவனங்கள் லாபகரமாக செயல்படுகின்றனவா என்பதை அறிந்து, தேவைப்படும் உதவிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்னென்ன தொழிலில் ஈடுபட்டு வருகின்றன, வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் எவை, நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்பட்டு, சேகரிக்கப்படுகிறது.
அதில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னை, தேவை விபரம் தெரியவரும். அதற்கு ஏற்ப, ஊக்குவிப்பு திட்டங்கள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.