ADDED : மார் 12, 2025 01:39 AM

திருப்பூர்:நடப்பு பருத்தி சீசனில் இதுவரை அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில் இருந்து மட்டும் 60 லட்சம் 'பேல்' பஞ்சு விற்பனையாகி உள்ளது.
இந்தியாவில் பருத்தி சீசன் அக்டோபர் மாதம் துவங்குகிறது. பருத்தி சாகுபடியில், மஹாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது; குஜராத் இரண்டாவது இடத்தில் இருக்கிறது; தெலுங்கானா மூன்றாவது இடத்திலும், தமிழகம் ஒன்பதாவது இடத்திலும் இருக்கின்றன.
நடப்பு பருத்தி ஆண்டு துவக்கத்தில் இருந்தே, முதல்தர பஞ்சு விற்பனை சூடுபிடித்தது. அதாவது, நவ., - டிச., மாதங்களில் விற்பனை அதிகம் நடந்தது.
இது குறித்து பருத்தி வர்த்தகர்கள் கூறுகையில், 'நடப்பு ஆண்டில் உலகளாவிய பருத்தி உற்பத்தி, 12 கோடி 'பேல்'களாக இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. சீனா மற்றும் பிரேசில் நாடுகளில் பருத்தி மகசூல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் பஞ்சு விலையில் பெரிய மாற்றம் இல்லை. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 3 சதவீதம் விலை குறைந்துள்ளது. பருத்தி சாகுபடி அபிவிருத்திக்கான புதிய ஐந்தாண்டு திட்டத்தை, சிறப்பு கவனத்துடன் செயல்படுத்த வேண்டும்' என்றனர்.