ADDED : பிப் 24, 2025 12:33 AM

பிரஸ்ஸல்ஸ்:ஐரோப்பிய யூனியன், பல்வேறு துறைகளில் இந்தியாவுடனான தன் ஒத்துழைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை டில்லியில் நடைபெறவுள்ள இருதரப்புக்கு இடையேயான இரண்டாவது வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் கூட்டத்தில், வர்த்தகம், மின்சார வாகனம் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாய்ப்பு
இக்கூட்டத்தில் பங்கேற்க, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் டில்லி வரவுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரிவிதிப்பு குறித்த அறிவிப்புகளும், சீனாவின் கடுமையான வர்த்தக நடைமுறைகளும் உலக பொருளாதாரத்துக்கு சவாலான சூழலை ஏற்படுத்தியுள்ளன.
இதையடுத்து, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகவும்; மிகப்பெரிய நுகர்வு நாடாகவும் விளங்கும் இந்தியாவோடு ஒத்துழைப்பை மேம்படுத்த, ஐரோப்பிய யூனியன் ஆர்வம் காட்டி வருகிறது.
டிரம்ப், அமெரிக்காவை பொருளாதார ரீதியாக மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதால், வளர்ந்து வரும் நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கான அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்தியுள்ளார்.
இது, வளர்ந்து வரும் நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவி உட்பட பல்வேறு உதவிகளை வழங்கி, அவற்றை தன் வசம் இழுக்க சீனாவுக்கு சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த சூழலில், இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ஐரோப்பிய யூனியனின் இருப்பை நிலைநிறுத்துவதோடு, மாறி வரும் பொருளாதார சூழலால், அதன் வர்த்தகம் பாதிக்கப்படாமல் தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
நோக்கம்
இருதரப்புக்கும் இடையேயான இந்த ஒத்துழைப்பின் வாயிலாக, உலக வர்த்தக சூழலில் நிலைத்தன்மை, பொருளாதார பாதுகாப்பு, நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவது வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் கூட்டம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. ஐரோப்பிய சந்தைகளில் இந்திய பொருட்களுக்கு எளிதான அணுகல் மற்றும் விதிமுறைகள் தொடர்பான இந்தியாவின் வாதத்தால், அடுத்தகட்ட விவாதங்கள் நடைபெறுவதில் தாமதமானது.
இந்நிலையில், நீண்ட நாளாக கிடப்பில் போடப்பட்டுள்ள விவாதங்களை மீண்டும் துவங்கி, இந்தியாவுடனான தாராள வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக நிறைவேற்றுவதே, டில்லி வரும் ஐரோப்பிய ஆணைய தலைவரின் நோக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தரப்புக்கும் இடையே நடைபெறவுள்ள இந்த பேச்சுகள், ஐரோப்பிய வாகன தயாரிப்பாளர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
ஒரு புறம் உலகத்தரம் வாய்ந்த மின்சார வாகனங்களோடு சீனா மிரட்ட, மற்றொரு புறம் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்க உள்ளதாக டிரம்ப் மிரட்டுகிறார்.
இந்நிலையில், இந்திய வாகன சந்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீத வளர்ச்சி அடையும் என்று எஸ் அண்டு பி., நிறுவனம் கணித்துள்ளது. சீனாவில் கடந்த 2000ங்களில் இதேபோன்ற சூழல் நிலவிய போதுதான், ஐரோப்பிய கார் தயாரிப்பாளர்கள் மிக அதிக லாபம் ஈட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாமல், இந்தியாவில் மின்சார வாகன பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதும், நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. மின்வாகன பயன்பாட்டுக்கு ஏற்ப, சார்ஜிங் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, சவாலான விஷயமாக உள்ளது.
இதற்காக இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் தலா 540 கோடி முதலீட்டை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒப்பந்தம்
இவைதவிர, செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர், தொலைத்தொடர்பு, சீனா அல்லாத வினியோக தொடர் உருவாக்கம் ஆகியவற்றிலும் இருதரப்பும் ஆர்வம் காட்டி வருகின்றன.
சிப் உருவாக்கத்தில் இணைந்து செயல்படுவது, திறமையாளர்கள் பரிமாற்றம் மற்றும் 6ஜி தொழில்நுட்பம் ஆகியவை குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஐரோப்பிய ஆணையத்தின் ஏ.ஐ., அலுவலகம் மற்றும் இந்தியாவின் ஏ.ஐ., திட்டத்தின் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
1. அமெரிக்கா, சீனாவை சமாளிக்க இந்தியாவை துணைகொள்வது
2. ஐரோப்பிய யூனியனின் வர்த்தகத்தை தற்காத்துக் கொள்வது
3. தாராள வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்றுவது
4. ஐரோப்பிய வாகன தயாரிப்பாளர்களுக்கான சந்தை
5. ஏ.ஐ., சிப், தொலைத்தொடர்பில் சீனா அல்லாத வினியோக தொடர் உருவாக்கம்.
2000ங்களில் இதே போன்றதொரு வளர்ச்சி சூழலில் சீனா இருந்த போதுதான் ஐரோப்பிய கார் தயாரிப்பாளார்கள் அதிக லாபம் ஈட்டினர்

