அரசு அழைப்பு விடுக்காததால் தொழில் சங்கத்தினர் அதிருப்தி
அரசு அழைப்பு விடுக்காததால் தொழில் சங்கத்தினர் அதிருப்தி
ADDED : ஜூலை 12, 2024 12:02 AM

சென்னை:லோக்சபா தேர்தல் முடிந்து இரு மாதங்களாகியும், மின்சார நிலைக் கட்டண குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்த, தமிழக அரசு அழைப்பு விடுக்காமல் இருப்பது, தொழில் துறையினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறியதாவது:
மின்சார நிலைக் கட்டணம் உயர்வால், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக ஏப்ரலில் கோவை வந்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ராஜா ஆகியோரிடம், மின்சார நிலைக் கட்டணத்தை குறைப்பது, உச்ச நேர மின் கட்டணத்தை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அவற்றின் மீது தேர்தல் முடிந்ததும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. தேர்தல் முடிந்து இரு மாதங்களாகி விட்டன.
கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண, தொழில் சங்கங்களுடன் பேச்சு நடத்த அழைக்குமாறு, அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதுவரை, அரசிடம் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. இது, தொழில்முனைவோர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அரசு விரைந்து பேச்சு நடத்தி தீர்வு காணவில்லை எனில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, சங்கங்கள் கூடி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.